குழந்தைத் திருமணம் நடைபெறும் நாடுகளில் 6வது இடத்தில் இந்தியா – ஐ.நா
நியூயார்க்: உலக அளவில் இந்தியாவில்தான் அதிக அளவிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன என்ற அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளது ஐநா அமைப்பு.
கிட்டதட்ட 42 சதவீத குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில்தான் நடைபெறுகின்றது என்று தெரிவித்துள்ளது ஐநா சபையின் ஆய்வறிக்கை.
அதில் முக்கியமாக குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் "டாப் 10" நாடுகளில் இந்தியா 6 ஆவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
யூனிசெப் அறிக்கை:
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான "யூனிசெப்" எனப்படும் சர்வதேச குழந்தைகள் கல்வி நிதியம் இது தொடர்பாக வெளியிட்ட "குழந்தை திருமணம் ஒழிப்பு" என்ற ஆய்வறிக்கையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
15 வயதிற்கு முன்பே திருமணம்:
அதன்படி, உலகளாவிய அளவில் வாழும் சுமார் 70 கோடி பெண்கள் தங்களது 18 ஆம் வயதை அடைவதற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும், 25 கோடி பெண்கள் 15 ஆவது வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிடுகிறது.
இளம் வயதில் திருமணம்:
இந்தியாவில் தற்போது வாழும் 20 முதல் 49 வயதுக்குட்பட்ட 27 சதவீதம் பெண்கள் 15 வயதுக்கு முன்னதாகவும், இதே வயது வரம்புக்குட்பட்ட 31 சதவீதம் பெண்கள் 15 க்கும், 18 க்கும் இடைப்பட்ட வயதிலும் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள் எனவும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பாவம் ஏழைப் பெண்கள்:
டொமினியன் குடியரசு மற்றும் இந்தியாவில் வாழும் சம வயது கொண்டவர்களில் வசதி படைத்த பெண்களின் 15.4 சதவீதத்தை விட 4 ஆண்டுகள் முன்னதாகவே ஏழை பெண்களுக்கு 19.7 என்ற சதவீதத்தில் திருமணம் நடைபெற்று விடுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
பெண்களின் உரிமை:
"சிறு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல் மிகவும் கொடுமையான செயல் ஆகும். அவர்களுடைய உரிமைகளை தட்டிப் பறிப்பதற்கு நமக்கு எந்த விதமான உரிமையும் இல்லை" என்று ஐநா கூறியுள்ளது.
அவர்களும் மனிதர்களே:
"அவர்கள் ஒன்றும் பொருட்கள் அல்ல. அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே வாழ்வதற்கு அனுமதியுங்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உலகமே மகிழ்ச்சியாகும்" என்றும் கூறியுள்ளது ஐநா.