பிலிப்பைன்ஸ்: மர்ம நபர்களால் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் தொழில் செய்து வந்த, இந்தியாச் சேர்ந்த நவ்ஜோத் சிங் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்த, 26 வயதான, நவ்ஜோத் சிங் என்பவர், பிலிப்பைன்சில் உள்ள நாகா என்ற நகரத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். தனது உதவியாளர்கள், லக்விந்தர் சிங் மற்றும் பரம்ஜித் சிங் ஆகியோருடன் சேர்ந்து, நவ்ஜோத் சிங், அங்கு தங்கியிருந்தார்.
நாகா அருகே உள்ள கிராமப்பகுதியான கலாபங்கா என்ற ஊரில், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை வசூலித்துக்கொண்டு இருந்தார் நவ்ஜோத் சிங். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், நவ்ஜோத் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் நவ்ஜோத் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உதவியாளரான லக்விந்தர் சிங்குக்கும் காயம் ஏற்பட்டது. அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நவ்ஜோத் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து பிலிப்பைன்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.