ஹமாஸ் தாக்குதலில் இந்தியாவில் பிறந்த இஸ்ரேல் வீரர் பலி
ஜெருசேலம்: ஹமாஸ் அமைப்பினர் நடத்திய அதிரடி ராக்கெட் தாக்குதலில் இன்று இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவர் இந்தியாவில் பிறந்த இஸ்ரேலியர் ஆவார்.
இவரையும் சேர்த்து இதுவரை ஹமாஸ் தாக்குதலில் 43 இஸ்ரேல் ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த பின்னர் ஹமாஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. சரமாரியான ராக்கெட் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மட்டும் ஐந்து ராக்கெட்கள் வீசித் தாக்குதல் நடத்தினர் ஹமாஸ். இதில் இரண்டு ராக்கெட்களை இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்கி அழித்து விட்டன. மற்றவை யாருமில்லாத பகுதிகளில் போய் விழுந்தன.
ஹமாஸ் தொடர்ந்து தாக்குவதைத் தொடர்ந்து இஸ்ரேலும் தற்போது பதில் தாக்குதலில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
போர் உக்கிரம்...
காஸா மீது கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போர் மேலும் உக்கிரமடையும் என்று தெரிகிறது.
ராக்கெட் தாக்குதல்...
தற்போது காஸா முனையிலிருந்து இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்களை சரமாரியாக வீசித் தாக்குகின்றனர்.
பொதுமக்கள் பலி...
இந்தத் தாக்குதலில் இன்று பராக் ரஃபேல் டிகோர்க்கர் என்ற 27 வயது இஸ்ரேலிய வீரர் கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் பிறந்த இஸ்ரேலியர் ஆவார். இவருடன் பொதுமக்கள் தரப்பில் 3 பேரும் கொல்லப்பட்டனர். கான் யவேன் என்ற இடத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.
பாலஸ்தீனியர்கள்...
ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 43 இஸ்ரேலிய ராணுவத்தினர் உள்பட 43 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் இஸ்ரேல் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை....
நிரந்தரப் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ஐநா. உள்ளிட்டவை கூடிப் பேசியும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போர் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது.