ஜீவனாம்சத்திற்காக முதல் மனைவி கொலை – அமெரிக்க வாழ் இந்தியருக்கு ஆயுள் தண்டனை!
நியூயார்க்: அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது முதல்மனைவியை சுட்டுக் கொலை செய்துள்ளார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சென்று, கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து அங்குள்ள பாஸ்டன் நகரில் வசித்து வருபவர், பல்டியோ தனேஜா.
முதல் மனைவியான ப்ரீத்தா கப்பா என்பவரை விவாகரத்து செய்துவிட்ட இவர், தனது இரண்டாவது மனைவியான ரமீந்தர் கவுர் என்பவருடன் வாழ்ந்து வந்தார்.
முதல் மனைவிக்கு ஜீவனாம்சம்:
முதல் மனைவிக்கு சட்டப்படி வழங்க வேண்டிய ஜீவனாம்சத்தை தராமல் இழுத்தடித்துவந்த பல்டியோ தனேஜா, கடந்த 2013 அன்று தனது இரண்டாவது மனைவியுடன் முதல் மனைவி ப்ரீத்தா கப்பா வசிக்கும் ஜெர்மன் டவுன் பகுதிக்குச் சென்றார்.
துப்பாக்கியால் சுட்டுக் கொலை:
ப்ரீத்தா கப்பாவுக்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்த பல்டியோ தனேஜா, தனது கைத்துப்பாக்கியால் அவரை 3 முறை சுட்டுக் கொன்றார்.
கொலை வழக்கு பதிவு:
பின்னர் ஏதுமறியாததுபோல் இரண்டாவது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்ட கொலையாளியை கைதுசெய்த போலீசார் அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு:
இது தொடர்பாக நடைபெற்றுவந்த விசாரணையில் குற்றவாளி பல்டியோ தனேஜாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த இரண்டாவது மனைவிக்கான தண்டனை என்ன என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.