மாணவரின் வீட்டில் திருடிய பெண் கிரிக்கெட் பயிற்சியாளர்கள்: சமூகசேவை செய்ய கோர்ட் உத்தரவு
சிங்கப்பூர்: மாணவரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய குற்றத்திற்காக கைது செய்யப் பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர்கள் இருவருக்கு சிறைத் தண்டனையும், சமூக சேவை செய்யவும் உத்தரவிட்டுள்ளது சிங்கப்பூர் நீதிமன்றம்.
இந்தியாவை சேர்ந்த சகோதரிகளான விக்னேஸ்வரி பசுபதி (வயது 24), ராஜேஸ்வரி பசுபதி (26) ஆகிய இருவரும் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளனர். அது தவிர அங்குள்ள பள்ளி ஒன்றில் கிரிக்கெட் பயிற்சியாளர்களாகவும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்களிடம் பயிற்சி பெரும் மாணவர்களில் ஒருவர் பெற்றோருடன் வெளியூர் செல்வதை அறிந்தனர் சகோதரிகள். இருவரும் ஒன்று சேர்ந்து அம்மாணவனின் வீட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து விட்டனர்.
போலீசாரின் விசாரணையில் சகோதரிகள் சிக்கிக் கொள்ள, இது தொடர்பாக அவர்கள் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மேத்யூ ஜோசப், விக்னேஸ்வரியை தண்டித்து, நன்னடத்தை சட்டத்தின்கீழ் விடுவித்தார். இருப்பினும் அவர் 150 மணி நேரம் சமூக சேவை செய்யவும், ரூ.2½ லட்சத்துக்கு ரொக்க பத்திரம் எழுதி தரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அவரது சகோதரி ராஜேஸ்வரிக்கு 15 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.