முன்னாள் காதலியை கொன்று இதயத்தை சமைத்துச் சாப்பிட்ட இண்டியானா காதலன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் முன்னாள் காதலியைக் கொன்று அவரது இதயம், மூளை உள்ளிட்ட உள்ளுறுப்புகளைச் சமைத்துச் சாப்பிட்ட காதலனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த ஜெப்பர் ஜோன்வில்லி பகுதியை சேர்ந்தவர்.டாம்மி ஜோ பிளாண்டன் (46). இவரது முன்னாள் காதலன் ஜோசப் ஒபர்கென்சலே (33).
சம்பவத்தன்று தனது காதலன் வீட்டை அடித்துச் சேதப்படுத்துவதாக பிளாண்டனிடமிருந்து போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் செல்வதற்கு முன்னதாக காதலர் ஜோசப் தலைமறைவாகி விட்டார்.
ஜோசப்பைத் தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மீண்டும் போலீசாருக்கு பிளாண்டனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. இம்முறை காதலரால் தனது உயிருக்கு ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரால், பிளாண்டனின் சடலத்தை மட்டுமே மீட்க முடிந்தது. பயங்கரமான முறையில் கொலை செய்யப் பட்டிருந்த பிளாண்டனின் உள்ளுறுப்புகளைக் காணவில்லை என பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிளாண்டனின் முன்னாள் காதலனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் பிளாண்டனைக் கொலை செய்ததை ஜோசப் ஒத்துக் கொண்டார்.
மேலும், பிளாண்டனின் உள்ளுறுப்புகளைத் தான் சமைத்துச் சாப்பிட்டதாகவும் போலீசில் ஜோசப் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார், ஜோசப் வீட்டில் இருந்து ரத்த கறைபடிந்த இடுக்கி, சமையல் செய்யபட்ட பாத்திரம் , மற்றும் மண்டை ஓடு எழும்பு ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.