தற்கொலைப் படையினருக்கு 'ஸ்பெஷல்' ஊசி போட்டு கொல்ல அனுப்பும் தலிபான்கள்!
காபூல்: சுய நினைவையும் பயத்தையும் போக்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஒரு வித ஊசியைப் போட்டு பின்னரே தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு தீவிரவாத தலைவர்கள் அனுப்புவதாக தெரிய வந்துள்ளது.
இதை ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாணத்தில் பிடிபட்ட தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒருவர் கூறியுள்ளார். அனைத்து தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுக்கும் இந்த ஸ்பெஷல் ஊசி போடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த ஊசி போட்டதும் தாங்கள் மிகுந்த வெறியுடனும், விருப்பத்துடனும் தாக்குதலில் ஈடுபடும் எண்ணம் வரும் என்றும் அந்த தீவிரவாதி கூறியுள்ளார்.
சிறப்பு ஊசி
இதுகுறித்து கைது செய்யப்பட்ட ரகமதுல்லா என்ற அந்தத் தீவிரவாதி கூறுகையில், தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு புறப்படுவதற்கு முன்பு அந்த தீவிரவாதிக்கு ஒரு ஊசி போடுவார்கள்.
சந்தோஷமாக போவார்கள்
அதுவரை இறுக்கமாக காணப்படும் அந்தத் தீவிரவாதி ஊசி போட்டவுடன் மாறி விடுவார். மிகுந்த உற்சாகத்துடன், ஒரு விதமான புத்துணர்ச்சியுடன், வெறி கொண்ட நிலையில், தனது இலக்கை நோக்கி விருப்பத்துடன் பயணிப்பார் என்று கூறியுள்ளார் ரகமதுல்லா.
பாகிஸ்தானில் பயிற்சி
ரகமதுல்லாவுக்கு ஆரம்பத்தில் பாகிஸ்தானில்தான் பயிற்சி அளித்து வந்துள்ளனர். பின்னர் அவர் காந்தஹார் மாகாணத்திற்கு வந்துள்ளார். அப்போதுதான் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக் கொண்டார்.
ஆளுநரைக் குறி வைத்து வந்தவர்
காந்தஹார் மாகாண ஆளுநரைக் கொல்லும் திட்டம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் இவர் சிக்கி விட்டார்.