தூக்கிற்குப் பதில் ஓங்கி ஒரு அறை... மகனைக் கொன்ற கொலையாளிக்கும் கருணை காண்பித்த ஈரான் தாய்
டெஹ்ரான்: தன் மகனைக் கொன்ற கொலையாளியாக இருந்த போதும், தன் கண் முன்னே மற்றொரு தாயின் கண்ணீரைக் காணச் சகிக்காத தாய் ஒருவர் அதிரடியாக செயல்பட்டு கொலையாளியை தூக்குத் தண்டனையில் இருந்த காப்பாற்றிய சம்பவம் ஒன்று ஈரானில் நடந்துள்ளது.
ஈரானில் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் குற்றவாளிகளுக்கு தண்டனைக் குறைப்புச் செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால் பல வழக்குகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வழக்கு விசாரணை சுமூகமாக முடிக்கப் பட்டு விடும். அப்படி வாய்ப்பில்லாத வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் கண் முன்பாகவே தண்டனை நிறைவேற்றப்படும்.
அந்தவகையில், நேற்று அங்கு ஒரு தூக்குத் தண்டனை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதில், ஈரான் நாட்டின் ராயன் நகரில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நடந்த தெரு சண்டையில் அப்துல்லா ஹுசைன் ஜடே (வயது 18) என்ற வாலிபரை கொலை செய்த பலால் என்ற மற்றொரு வாலிபருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றன.
இதற்காக பொதுமக்கள் கூடிய கூட்டத்திற்கு நடுவே தடுப்பு வேலிக்குள் பலால் கொண்டு வரப்பட்டு, அவனது கைகள் கட்டப்பட்டதுடன், கறுப்பு துணியால் கண்களும் கட்டப்பட்டன. அவனது கழுத்தில் சுருக்கு கயிறு மாட்டப்பட்டது.
அப்போது திடீரென பலால் அருகே வந்த அப்துல்லாவின் தாய், அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர் அவனது கழுத்தில் இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டார்.
இதனை கண்ட மகிழ்ச்சியில் பலாலின் தாய் ஓடி வந்து அப்துல்லாவின் தாயை கட்டி கொண்டார். தனது மனைவியின் திடீர் மனமாற்றம் குறித்து அப்துல்லாவின் தந்தை அப்துல்கனி ஹுசைன் ஜடே கூறும்போது, ‘கடந்த 3 தினங்களுக்கு முன்பு எனது மனைவியின் கனவில் எனது மூத்த மகன் வந்து உள்ளான்.
அவன், தான் நல்ல இடத்தில் இருப்பதாகவும் எனவே, பழிக்கு பழி வாங்க வேண்டாம் என்றும் தெரிவித்தான். இது எனது மனைவியை அமைதியடைய செய்தது. எனவே, தண்டனை நிறைவேறும் நாள் வரை நாங்கள் அதிகமாக யோசித்தோம்' என்றார்.
மேலும், எனது மகனை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பலால் செயல்படவில்லை என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலால் இப்போதைக்கு மரண தண்டனையிலிருந்து தப்பித்த போதும், சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.