கடத்தி ஆடு, மாடுகளை போன்று ஏலத்தில் விடப்பட்ட ஈராக் பெண்கள், சிறுமிகள்: 'திடுக்' தகவல்
வாஷிங்டன்: ஆயிரக்கணக்கான ஈராக் பெண்கள் கடத்தப்பட்டு ஆடு, மாடுகளை போன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஏலத்தில் விடப்பட்டதாக அமெரிக்க அரசு தனது பிளாக்கில் தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தான் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பு என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ18 கோடிக்கும் அதிகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் வங்கிகளை கொள்ளையடிப்பது, ஆட்களை கடத்தி விற்பது, மிரட்டி பணம் பறிப்பது ஆகியவை மூலம் தான் பணம் சம்பாதிக்கிறார்கள்.
ஈராக் பெண்கள்
ஈராக்கில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்களை தீவிரவாதிகள் கடத்தி அவர்களை கடந்த 2 மாதங்களாக சந்தைகளில் விற்பனை செய்துள்ளதாக அமெரிக்க அரசு தனது பிளாக்கில் தெரிவித்துள்ளது.
கொடுமை
ஈராக் பெண்கள் அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்து பிரிக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு செக்ஸ் அடிமைகளாக ஆக்கப்பட்டதுடன், கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வைத்தது உள்ளிட்ட பல கொடுமைகளை அனுபவிப்பதாக அந்த பிளாக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதமாற்றம்
மதம் மாற மறுக்கும் பெண்கள் அதற்கு சம்மதிக்கும் வரை அவர்களின் குழந்தைகளின் கண் முன்னாலேயே அவர்களை தீவிரவாதிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
சிறுமிகள்
ஈராக்கில் உள்ள சிறுபான்மையினத்தை சேர்ந்த 1,500 முதல் 4 ஆயிரம் பெண்கள் சிறுமிகள் கடத்தப்பட்டுள்ளனர். அதில் 12, 13 வயது சிறுமிகள் ஆடு, மாடுகளைப் போன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளனர்.
மரணம்
தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி கொடுமைப்படுவதை விட நாங்கள் இறந்துவிடுகிறோம் என்று பல பெண்கள் கதறியுள்ளனர் என அந்த பிளாக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.