250 சிரியா ராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஐ.எஸ்.ஐ.எஸ். வெளியிட்ட பயங்கர வீடியோ!
ரக்கா: சிரியா ராணுவ வீரர்கள் 250 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் வீடியோவை வெளியிட்டு உலகை அதிர வைத்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் பல பகுதிகளை பிடித்துள்ளனர். அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இந்த இயக்கத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க அமெரிக்கா ஈராக்கில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா மீது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கடும் ஆத்திரத்தில் உள்ளது. இந்த கோபத்தின் வெளிப்பாடாக அமெரிக்க பத்திரிகை நிருபர் போலியை தலை துண்டித்து படுகொலை செய்தனர்.
இதனையடுத்து ஈராக்கை தொடர்ந்து சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகள் மீதும் ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். 250 ராணுவ வீரர்களை அந்த இயக்கம் கொன்று குவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சிரியாவின் தாப்கா விமானத் தளத்தை கைப்பற்றுவது தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் ராணுவம் இடையிலான மோதலில் பலர் பலியாகினர். விமானத் தளத்தை கைப்பற்றிய போது பின்வாங்கிய சிரியா ராணுவ வீரர்கள் 300க்கும் மேற்பட்ட பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைது செய்தது.
தற்போது அவர்களில் 250 பேர் கொல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. சிரியா ராணுவத்தினரை படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். தங்கள் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் உள்ளாடைகளுடன் துப்பாக்கி முனையில் இருப்பது வீடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதற்கிடையே ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு எதிராக போராட மற்ற நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.