ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் ட்ரோன்..!
காஸா: ஈராக்கின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ், தற்போது நவீன ரக ட்ரோன்களையும் பெற ஆரம்பித்திருப்பது உலக நாடுகளைக் கவலை கொள்ள செய்துள்ளது.
தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் ஒரே ஒரு ட்ரோன் உள்ளதாம். ஆனால் அதில் ஏவுகணை எதுவும் பொருத்தப்படவில்லை. மாறாக கேமராவைப் பொருத்தியுள்ளனர். இந்த ட்ரோன் ஆனது, அமெரிக்கா பயன்படுத்தி வந்த ட்ரோன் ஆகும்.
இந்த ட்ரோனை தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெற்றிருப்பது அதிர்ச்சித் தகவலாக உள்ளது. ஏற்கனவே ரக்கா நகரில் உள்ள சிரிய விமான தளத்தை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதற்கு இந்த அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன்தான் உதவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவு பார்க்க
தலிபான் தீவிரவாதிகளை அழிக்க தற்போது அமெரிக்கப் படையினர் ட்ரோன்களை ஏவித்தான் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களுக்குக் கிடைத்துள்ள ட்ரோனை வைத்து அதில் கேமராவைப் பொருத்தி உளவு பார்க்க பயன்படுத்துகின்றனர்.
விமான தளத்தை உளவு பார்த்து கைப்பற்றினர்
ரக்கா நகரில் உள்ள சிரிய விமான தளத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு அங்கு உள்ள படையினர் நடமாட்டம் உள்ளிட்டவற்றை உளவு பார்த்து பின்னர் அவர்கள் தாக்குதல் தொடுத்திருப்பதாக நம்பப்படுகிறது.
திட்டமிட உதவும்
மேலும் இந்த ட்ரோனை வைத்து தாங்கள் குறி வைக்கும் பகுதியில் உள்ள நிலவரத்தை அறிந்து கொண்டு துல்லியமாக திட்டமிட தீவிரவாதிகளுக்கு இது உதவும் என்பது பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தாகும்.
டிவிட்டர், யூடியூப்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஏற்கனவே தொழில்நுட்ப வசதிகளையும் முறையாகப் பயன்படுத்தி தங்களது வீச்சையும், வீரியதைதயும் உலகுக்கு எடுத்துக் காட்டி வருகின்றனர். டிவிட்டர், யூடியூப் என சகல தொழில்நுட்பங்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே ட்ரோன் அவர்கள் கைவசப்பட்டிருப்பதில் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள்.
மேற்கத்திய நாடுகள்
மேற்கத்திய நாடுகள் பலவும் ட்ரோன்களை பல காலமாக பயன்படுத்தி வருகின்றனர். ட்ரோன் என்பது ஆளில்லாத உளவு விமானங்கள். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதில் ஏவுகணைகளைப் பொருத்தி தாக்குதலுக்கும் பயன்படுத்துகின்றன.
தனியார் நிறுவனங்கள் விற்கின்றன
பல தனியார் நிறுவனங்கள் ட்ரோன்களைத் தயாரித்து விற்பனையும் செய்கின்றன. எனவே ஐஎஸ்ஐஎஸ் போன்ற பக்கா தீவிரவாத அமைப்புக்கு இதுபோன்ற ட்ரோன்களை வாங்குவது என்பது பெரிய விஷயமல்ல என்கிறார்கள்.
என்னென்ன ஆபத்து வருமோ
ஆனால் இந்த தீவிரவாத அமைப்பிடம் ட்ரோன்களின் இருப்பு அதிகமாகும்போது என்ன மாதிரியான பாதிப்புகள், அபாயங்கள் விளையும் என்பதைக் கணிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் அபாயகரமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.