பாலியல் அடிமைகளாக 500 பெண்களை விற்பனை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ்.: திடுக் தகவல்!
மொசூல்: ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டு நகரங்களில் இருக்கும் பிற மதத்து பெண்களை பாலியல் தொழில் அடிமைகளாக ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தினர் விற்பனை செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் உள்நாட்டுப் போரை நடத்தி வருகின்றனர். அத்துடன் சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளைக் கொண்டு இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அங்கு இஸ்லாத்தின் ஷரியத் சட்டம்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மொசூல் நகரத்தில் வசிக்கும் கிறிஸ்துவர்கள் உட்பட பிற மதத்தினர் கட்டாயம் மதமாற வேண்டும் என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் கட்டளையிட்டுள்ளனர்.
இதனை நிராகரித்து பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக சிரியாவுக்கும் குர்திஷ் மாகாணத்துக்கும் தப்பி சென்று வருகின்றனர். இந்த நிலையில் மொசூல் நகரில் 500க்கும் மேற்பட்ட பிற மதப் பெண்களை பாலியல் தொழில் அடிமைகளாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் விற்பனை செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன் தப்பி ஓடும் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாகவும் இதனால் பலர் தற்கொலை செய்துகொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.