புதிய 'இஸ்லாமிய தேச'த்தில் முஸ்லிம்கள் குடியேற ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அல் பாக்தாதி அழைப்பு!!
மொசூல்: சிரியா- ஈராக் நகரங்களை இணைத்து தாங்கள் உருவாகியிருக்கும் புதிய இஸ்லாமிய தேசத்தில் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் வந்து குடியேற வேண்டும் என்று அதன் கலீபாவாகிய அபு பக்ர் அல் பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. அத்துடன் இந்த நகரங்களை ஒருங்கிணைத்து புதிய இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இதன் கலீபாவாக (தலைவராக) அபு பக்ர் அல் பாக்தாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அபு பக்ர் அல் பாக்தாதி வெளியிட்டுள்ள ஆடியோ செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகம் எங்கும் வாழும் முஸ்லிம்கள் ஈராக் மற்றும் சிரியாவுக்கு வந்து புதிதாக உருவானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அரசை பலப்படுத்த வேண்டும்.
இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது என்பது முஸ்லிம்களின் "கடமை". நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய தேசத்துக்கு வரவேண்டும்.
சிரியா , சிரியர்களுக்கு மட்டுமானதல்ல, ஈராக், ஈராக்கியர்களுக்கு மட்டுமானதல்ல, முஸ்லிம் மக்களே உங்கள் நாட்டுக்கு விரைந்து வாருங்கள்.
அல்லா காட்டிய வழியில் நமது புனிதப் போரை நடத்துவதைத் தவிர இந்த புனிதமான ரமலான் மாதத்தில் செய்யக்கூடிய புனிதமான பணி வேறு எதுவுமே இருக்கமுடியாது, எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உங்கள் தூய்மையான முன்னோர்களின் வழியில் செல்லுங்கள்
இவ்வாறு அல் பக்பாக்தாதி தமது ஆடியோ செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.