சிரியா, ஈராக் பகுதிகளை இணைத்து "தனி இஸ்லாமியநாடு" என பிரகடனம் செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ்.!
மொசூல்: சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து தனி இஸ்லாமிய நாடு என்று பிரகடனம் செய்துள்ளது சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு. இதன் கலிபாவாக (மன்னராக) அபு பக்கர் அல் பக்தாதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டுவந்துள்ளது. ஷியா முஸ்லிம்களின் ஆட்சி அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலக்காகும்.
இந்த அமைப்பில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் ஏராளாமானோர் உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக சர்வதேச நாடுகள் எந்த ஒருநடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வந்தது.
ரஷியா, அமெரிக்கா
இந்த நிலையில் திடீரென ஈராக்குக்கு ஆதரவாக ரஷியா ஜெட் போர் விமானங்களை அனுப்பி தாக்குதலை நடத்த உதவியது. அமெரிக்காவும் ஆளில்லா போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.
திக்ரித் சண்டை
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். வசமுள்ள நகரங்களை மீட்க ஈராக் ராணுவம் முயற்சித்துப் பார்த்து வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியுள்ள திக்ரித் நகரை மீட்க ஈராக் ராணுவம் போராடிப் பார்த்தது. ஆனால் அது கைகூடவில்லை.
அதிரடி பிரகடனம்
இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபு முஹம்மத் அல் அதானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைந்து 'தனி இஸ்லாமிய நாடு" அமைத்துள்ளதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கலிபாவாக பக்தாதி
அத்துடன் இந்த தனி இஸ்லாமிய தேசத்தின் மன்னராக (கலிபா) ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான அபு பக்கர் அல் பக்தாதி இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் மாற்றம்
மேலும் தங்களது அமைப்பின் பெயரான ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது இனி "இஸ்லாமிய தேசம்" என மாற்றப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.