ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள்: திடுக் தகவல்!
பாக்தாத்: ஈராக்கில் கடந்த 2 நாட்களாக அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கின் துலுயியா நகரம் கடந்த 2 மாதங்களாக ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நகரத்தை மீட்பதற்காக அந்நாட்டு ராணுவம் நேற்று முன்தினம் தாக்குதலை தீவிரப்படுத்தியது.
கடந்த 2 நாட்களாக உக்கிரமாக நீடித்து வரும் இந்த மோதலின் போது ஐ.எஸ். தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்கள் மூலமாக ஈராக் ராணுவத்தைத் தாக்கியதாக உள்நாட்டு ஊடகங்கள் திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கடந்த ஜூலை மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் பெருமளவு ரசாயன ஆயுதங்கள் இருக்கக் கூடும் என்று ஈராக் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஐ.நா.வுக்கான ஈராக் தூதர் இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், ரசாயன ஆயுதங்களுடன் கூடிய 2,500 ராக்கெட்டுகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரசாயன ஆயுதங்கள் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சோடியம் சயனைடுவுடன் கூடிய ராக்கெட்டுகளைத்தான் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏவியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.