போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு... இதுவரை 1000 பாலஸ்தீனியர்கள் பலி
ஜெருசலேம்: காஸா முனைப் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் தொடர்ந்த நிலையில் நேற்று இரவு போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. ஆனால் இதை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது
இதற்கிடையே, இடைவிடாத தாக்குதலில் சிக்கி இறந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் காஸாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
12 மணி நேர போர் நிறுத்தம்
இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பும் ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் முயற்சியால் 12 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்டன. இதையடுத்து 12 மணி நேர போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. தற்போது அது முடிந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்தது.
போர் நிறுத்தம் நீட்டிப்பு
அதேசமயம், இரவில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக இஸ்ரேல் திடீரென அறிவித்தது. ஆனால் இதை ஹமாஸ் நிராகரித்து விட்டது.
எங்கு பார்த்தாலும் உடல்கள்
காஸாவின் பல பகுதிகளிலும் உடல்கள் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேல் தாக்குதலில் இறந்தோர் எண்ணிக்கை இதுவரை 1000 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இஸ்ரேல் தரப்பில் வெறும் 42 பேர் தான் இறந்துள்ளனர்.
நிரந்தர போர் நிறுத்தம் வருமா...
இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினரிடையே நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாரீஸ் நகரில் நேற்று பிரான்ஸ் ஏற்பாட்டின் பேரில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஐரோப்பிய யூனியன், துருக்கி, கத்தார் நாடுகளின் அதிகாரிகள் இது தொடர்பாக ஆலோசித்தனர்.
ஹமாஸ் பிடிவாதம்
இந்த நிலையில்தான் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்தது. அதேசமயம், ஹமாஸ் தாக்கினால் தாங்களும் தாக்கும் வகையில் தனது படையினரை ஆயத்தமாக வைத்திருக்கிறது இஸ்ரேல்.
ராக்கெட் தாக்குதல்
அதேசமயம், ஹமாஸ் இந்த அறிவிப்பை நிராகரித்துள்ளது. நேற்று மாலையிலிருந்து அது இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
உருப்படியான போர் நிறுத்தம் தேவை
இதுகுறித்து ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் சமி அபு ஜுகரி கூறுகையில், காஸாவின் எல்லைப்பகுதியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் விலக வேண்டும். மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும். காயமடைந்தோரை மீட்க அனுமதிக்க வேண்டும். அதுவரை எந்தவிதமான போர் நிறுத்தத்தையும் ஏற்க மாட்டோம் என்று கூறினார்.
19 நாள் போர்
இதனால் பதட்டம் தொடர்கிறது. கடந்த 19 நாட்களாக காஸா மீது இஸ்ரேல் பலமுனைத் தாக்குதலை நடத்தி வருகிறது. பல நூறு வீடுகள் இதில் தரைமட்டமாகியுள்ளன. காஸா முழுவதும் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் 90 சதவீதம் அப்பாவிகள்தான் பலியாகியுள்ளனர்.