இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதல்: இன்று காலை முதல் 72 மணி நேர போர் நிறுத்தம்
ஜெருசலேம்: காஸா பகுதியில் 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும், பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
காஸா முனை மீது கடந்த மாதம் 8ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நகரங்கள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். காஸாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும் ஒரே சேர நடத்தியது.
தீவிரப்படுத்திய இஸ்ரேல்
போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உலகளாவிய அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவற்றை ஏற்காதவிதத்தில் காஸாமுனை மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவது என்று இஸ்ரேல் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.
அப்பாவிகள் அதிகம் சாவு
காஸாமுனையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,432 ஆக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள்தான். இஸ்ரேல் வீரர்களில் 56 பேரும், பொதுமக்களில் 3 பேரும் இறந்துள்ளனர்.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தலையீடு
காஸா பகுதியில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மேற்கொள்ளவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வேண்டுகோள் விடுத்துவருகிறது. காஸா பகுதியில் அப்பாவி மக்கள் இதுவரை கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருப்பதும் மிகுந்த வேதனை அளிப்பதால் போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வேண்டுகோள் விடுத்தது.
ஹமாஸ் பிடிவாதம்
காஸாமுனையில் 7 ஆண்டுகளாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து படைகளின் முற்றுகையை விலக்கிக்கொண்டால் மட்டுமே நிரந்தரமாக சண்டை நிறுத்தம் சாத்தியம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.
போர் நிறுத்தம்
இந்நிலையில், காஸாவில் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் போரை நிறுத்திக் கொள்ள இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் சம்மதம் தெரிவித்துள்ளன. இருதரப்பினரும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த கெய்ரோ செல்கின்றனர்.
ஐ.நா., அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய செயலாளர் பான் கி மூன் இணையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று காலை (உள்ளூர் நேரப்படி) 8 மணி முதல் அங்கு போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐ.நா.வின் பரிந்துரையை ஏற்று போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் பலமாக உள்ள ஹமாஸ் இயக்கமும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
அப்பாவி மக்களுக்காக...
"மனிதாபிமான அடிப்படையில் யுத்தநிறுத்தம் தொடங்கும் வரையில் இருதரப்பினரும் அமைதியாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். போர் நிறுத்த வேலையில் இரு தரப்பினரும் தமது வாக்குறுதிகளை பின்பற்ற வேண்டும். நீண்ட வன்முறைக்கு இடையே, பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்களுக்கு இடை ஓய்வு மிகவும் அவசியமானது. இந்த போர் நிறுத்தம் அப்பாவி பொதுமக்களுக்காக கொண்டுவரப்படுகிறது" என்று ஐ.நா.வும், அமெரிக்காவும் கூட்டாக தெரிவித்துள்ளன.