12 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல்!!
ஜெருசலேம்: இஸ்ரேல் மற்றும் காஸாவின் ஹமாஸ் இயக்கம் 12 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ந் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர்.
அந்த மாணவர்களைக் கொன்று சடலங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான மேற்கு கரை அருகே வீசி சென்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
சரமாரி தாக்குதல்
இதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடையே யுத்தம் மூண்டது. ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
காஸாவை கைப்பற்றும் இஸ்ரேல்
ஹமாஸ் குழுவினரும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி வருவதால் காஸா பகுதியை கைப்பற்றும் வகையில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
850 பேர் பலி
கடந்த 19 நாட்களாக நீடித்து வரும் 850 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இவர்களில் 150 பேர் பிஞ்சு குழந்தைகள். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அமைதி முயற்சி
இஸ்ரேல் தரப்பில் இதுவரை மொத்தம் 36 பேர் பலியாகி உள்ளனர். இருதரப்பு மோதலையும் முடிவுக்கு கொண்டு அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
பிரம்மாண்ட பேரணி
இதனிடையே இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்து வியாழன்று இரவு பாலஸ்தீனத்தின் தலைநகர் ரமல்லாவில் இருந்து ஜெருசலேம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அப்பேரணியின் முடிவிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 2 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
ரமலானை முன்னிட்டு
இந்நிலையில் ரமலான் நோன்புக் காலம் என்பதால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்கி சேமித்துக் கொள்ளவும், அவற்றை விற்பனை செய்யும் கடைகளை திறந்து வைக்கவும் வசதியாக இரு தரப்பினரும் சில மணி நேரங்களுக்காவது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐ.நா. சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
12 மணி நேர யுத்த நிறுத்தம்
இதனை ஏற்று இஸ்ரேலும் ஹமாஸ் போராளிகளும் 12 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த குறுகிய நேர யுத்த நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.