எல்லோரும் கேட்டுக்கோங்க: செல்போன் பயன்படுத்துவதால் 'கேன்சர்' வராதாம்
வாஷிங்டன்: செல்போன் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்பது உண்மை இல்லை என புதிய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
செல்போன் பயன்படுத்துவதால், செல்போன் டவர்களால் மூளையில் கட்டி ஏற்படும், தலைவலி மற்றும் புற்றுநோய் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.
ஆனால் மக்கள் இனி செல்போன்கள் பற்றி அச்சப்பட வேண்டியது இல்லை.
புதிய ஆய்வு
செல்போனை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவு மக்களுக்கு நிம்மதி அளிப்பதாக உள்ளது.
புற்றுநோய்
செல்போன் பயன்பாட்டால் மூளையில் கட்டி ஏற்படவோ, புற்றுநோய் ஏற்படவோ செய்யாது என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த முடிவை இங்கிலாந்தின் செல்போன் தொலைத்தொடர்பு மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டம் ஆதரித்துள்ளது.
கர்ப்பிணிகள்
கர்ப்பிணிகள் செல்போன் டவர் அருகே வசிப்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இது குறித்து செல்போன் தொலைத்தொடர்பு மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டம் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளது.
குழந்தைகள்
கர்ப்பிணிகள் செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ரத்த புற்றுநோய் ஏற்படும் என்று கூறப்படுவதற்கும் எந்தவித ஆதாரமும் இல்லை.
வை-ஃபை
செல்போன் மற்றும் வைஃபை தகவல்களை தாங்கிச் செல்லும் ரேடியோ சிக்னல்களால் மனிதர்களின் உடல்நலம் பாதிக்கப்படாது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.