துபாயை சிரிப்பொலியில் குலுங்க வைத்த கோலிவுட் காமெடி ஷோ
துபாய்: வேவ் ரெசொனன்ஸ் ஈவென்ட்ஸ் (WAVE Resonance Events) ஏற்பாடு செய்த "கோலிவுட் காமெடி ஷோ" 18.04.2014 அன்று மாலை துபாய் இந்தியன் பள்ளியின் ஷேக் ரஷீத் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நடிகர், இயக்குனர் பாண்டியராஜன், ஸ்டார் விஜய் தொலைக்காட்சி புகழ் சின்னத்திரை நட்சத்திரங்கள் ரோபோ ஷங்கர், வடிவேல் பாலாஜி, கணேஷ்கர், ஆர்த்தி, அமுதவாணன் ஆகியோரின் பலகுரல் நகைச்சுவை மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஷரன், பிரியங்காஆகியோரின் திரைஇசை பாடல் நிகழ்ச்சிகள் அமீரக ரசிகர்களின் ஒரு வாரத்து களைப்பை போக்கி, அந்த வெள்ளிக்கிழமை மாலை வேளை மனத்தை மகிழ்வலைகளால் நிரப்பியது. ஐபிஎல் விளையாட்டுக்களையும் தாண்டி அரங்கம் நிரம்பி வழிந்தது. அமீரக மக்களின் கலை உள்ளத்தை கண்ணாடியென பிரதிபலித்தது. கடல் கடந்து வந்திருந்த கலைஞர்களுடன் கை கோர்த்து அமீரக கலைஞர்களும் நாட்டியம், பாடல்கள் என ரசிகர் கூட்டத்தை வசியம் செய்தனர்.
பார்வையாளர்கள் பங்கேற்ற போட்டிகளுடன், கலை நிகழ்ச்சிகள் மாலை 7.30 மணிக்கு துவங்கி இரவு 11.30 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்ச்சனா வெகு நேர்த்தியாக தொகுத்து வழங்க, அமீரக அரங்கில் இந்த வருடத்தின் இரண்டாவது வசந்தம் தென்றலாய் வீசியது. இயக்குனர் பாண்டியராஜனின் பேச்சு, தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக இருந்தது. சற்றும் சுவாரஸ்யம் குறையாத நிகழ்ச்சிகள் ஏறத்தாழ நான்கு மணி நேரம் தொடர்ந்தன.
விழா அமைப்பாளர் ரமேஷ்பாபு ஸ்பான்சர் மற்றும் கலைஞர்களுக்கான நினைவுப் பரிசுகளை வழங்கினார். பார்வையாளர்களுக்கான போட்டிகளில் வென்றவர்களுக்கும், சிறப்புக் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் இயக்குனர் பாண்டியராஜன் பரிசுகள் வழங்க, விழா இனிதே நிறைவு பெற்றது.