லைபீரியாவில் 'எபோலா' நோயாளிகளின் ரத்தக்கறை படிந்த பெட்ஷீட்களை திருடிச் சென்ற 17 பேர்
மான்ரோவியா: லைபீரியாவில் உள்ள எபோலா மெடிக்கல் சென்டரில் இருந்து எபோலா காய்ச்சால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தக் கறை படிந்த படுக்கை விரிப்புகள் மற்றும் படுக்கைகளை திருடிச் சென்ற 17 பேரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கி லைபீரியா, நைஜீரியா, சியர்ரா லியோன், கினியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், பலர் வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் லைபீரியாவில் எபோலா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ மையத்திற்குள் புகுந்த சிலர் அங்கிருந்த எபோலா நோயாளிகளின் ரத்தக்கறை படிந்த படுக்கை மற்றும் படுக்கை விரிப்புகளை திருடிச் சென்றுவிட்டனர். அவர்கள் அந்த பொருட்களை பெரிய சேரிப்பகுதிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு போராடி வரும் நிலையில் அந்த 17 பேர் திருடிச் சென்ற பொருட்களால் வைரஸ் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 413 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் லைபீரிய அரசின் வேண்டுகோளை அடுத்து அமெரிக்கா அனுப்பிய இசட்மாப் என்ற மருந்து எபோலா நோயாளிகளுக்கு சோதனை அடிப்படையில் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.