பீதி கிளப்பிய மலேசிய விமானம்! பெங்களூர் புறப்பட்ட போது கோளாறு! பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது
கோலாலம்பூர்: 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பற்றிய புதிரே இன்னும் முடிவுக்கு வரவில்லை..அதற்குள் கோலாலம்பூரில் இருந்து பெங்களூர் நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பீதியை கிளப்ப பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது.
மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த எம்.ஹெச்.192 என்ற மலேசிய பயணிகள் விமானம் நேற்று இரவு அந்நாட்டு நேரப்படி இரவு 10.09 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து பெங்களூருக்கு 166 பயணிகளுடன் புறப்பட்டது.
ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தையே தொடர்ந்து சுற்றி சுற்றி வந்தது. இதனால் பயணிகள் பீதிக்குள்ளாகினர்.
இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இதர விமான சேவைகள் அனைத்தும் உடனே நிறுத்தப்பட்டன. பின்னர் அதிகாலை 2 மணியளவில் அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதைத் தொடர்ந்து விமான இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது.
அண்மையில்தான் எம்.ஹெச்..370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 239 பயணிகளுடன் மாயமாகி உலகையே அதிரவைத்துள்ள நிலையில் மற்றொரு மலேசிய விமானம் மீண்டும் பீதியை கிளப்பியிருப்பது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.