பயங்கர சத்தத்துடன் விமானம் மிகத் தாழ்வாக பறந்ததை பார்த்தோம்: மாலத்தீவு வாசிகள்
மாலி: மலேசிய விமானம் எம்.ஹெச்- 370 மாயமான அன்று (கடந்த 8ம் தேதி ) காலை ஒரு விமானம் மிகவும் தாழ்வாகப் தங்கள் தீவின் மீது பறந்ததைப் பார்த்ததாக மாலத் தீவின் ஹுதா ஹுவாதூ தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இத் தகவலை மாலத்தீவின் செய்தி இணையதளமான ஹவீரு தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனாவுக்கு 239 பேருடன் கிளம்பிய விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. இந்நிலையில் விமானம் மாயமான காலை 6.15 மணிக்கு கன ரக விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்ததை பார்த்ததாக குட்டி, குட்டி தீவுகள் பலவற்றை உள்ளடக்கிய மாலத்தீவு வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மாலத்தீவுகள் அரபிக் கடலில் உள்ள தீவுக் கூட்டமாகும். கேரளா- தமிழகத்துக்கு தென் மேற்கே ஆரம்பித்து பல்லாயிரம் கிமீ பரப்பில் வடக்கு- தெற்காக இந்தத் தீவுக் கூட்டம் பரவிக் கிடக்கிறது.
இதில் ஒரு தீவான ஹுதா ஹுவாதூவில் வசிக்கும் மக்கள் தான் விமானத்தை பார்த்துள்ளனர்.
இது குறித்து விமானத்தை பார்த்தவர்கள் கூறுகையில்,
மலேசியா விமானம் போன்றே வெள்ளை நிறத்தில் சிவப்பு கோடுகள் போட்ட விமானத்தை தான் பார்த்தோம். அது வடக்கில் இருந்து தென்-கிழக்கு நோக்கி அதுவும் மாலத்தீவுகளில் உள்ள அட்டு தீவு நோக்கி பறந்து சென்றது. மேலும் அது எங்கள் தீவு வழியாக செல்லும்போது பயங்கரமான சத்தத்துடன் சென்றது என்றனர்.
இத்தனை நாட்களாக விமானத்தை தென் சீன கடல் பகுதியில் இருந்து இந்திய பெருங்கடல் வரை தேடிய நிலையில் விமானம் மாலத்தீவுகளில் பறந்தது தெரிய வந்துள்ளது.
விமானம் மாலத்தீவுகளுக்கு தெற்கே உள்ள ஒரு தீவு இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ளது (பிரிட்டிஷ் இந்தியன் ஓஷன் டெரிடரி). இங்குள்ள டீகோ கார்சியா என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ தளம் உள்ளது. விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டு விமானத்தை திசை திருப்பி டீகோ கார்சியா ராணுவ தளத்தில் உள்ள ரன்வே-யில் விமானத்தை தரையிறக்க விமானிகள் முயன்றிருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதனால் இப்போது தேடுதல் பணிகள் மாலத்தீவுகள், டீகோ கார்சியாவுக்கு இடையே நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் மாலத்தீவுகள் பகுதியில் மாயமான மலேசிய விமானம் செல்லவில்லை என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டு ராணுவ ரேடாரில் மலேசிய விமானம் பதிவாகவில்லை என்று அது மேலும் தெரிவித்துள்ளது.