மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை படுகொலை செய்த கடத்தல்காரர்கள்!
ஜெனீவா: மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கடத்தல்காரர்கள் படுகொலை செய்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில் புறப்பட்டு சென்றனர். எகிப்தில் உள்ள டமிட்டா என்ற இடத்தில் இருந்து சுமார் 500 பேர் புறப்பட்டனர்.
கடந்த 6ந்தேதி புறப்பட்ட இவர்கள் 10ந்தேதி மத்திய தரைக்கடலில் மால்டா தீவு அருகே வந்தபோது கப்பலில் அழைத்து வந்த கடத்தல்காரர்கள் அகதிகளை பல சிறிய படகுகளில் ஏறி செல்லுமாறு கூறினர்.
ஆனால் படகுகள் மிக சிறியதாக இருந்ததால் அதில் ஏற அகதிகள் மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கப்பலை தாக்கி அடித்து கடலில் மூழ்கடித்தனர்.
இச்சம்பவத்தில் 500 பேர் பலியாகினர். 9 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். படகில் அழைத்து வரப்பட்ட அவர்கள் நடந்த விவரங்களை தெரிவித்தனர்.
அண்மைய ஆண்டுகளில் நிகழ்ந்த மிக கோரமான படகு விபத்தாக இது கருதப்படுகிறது.