செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழலாம் – விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய தகுதி இருப்பதை நிரூபிக்கும் மேலும் ஒரு ஆதாரத்தை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள தாது குறித்த ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. இந்த தாது ஆராய்ச்சி மூலம் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற சூழல் அதிகமாகவே செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
செவ்வாய் கிரகத்திலிருந்து கிடைத்த விண்கல்லான நக்லா என்பதை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் இரும்புத் தாது அடங்கிய களிமண் இருப்பதையும், பல்வேறு தாதுப் பொருட்கள் இருப்பதற்கான அறிகுறிகளையும் கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வானது செவ்வாய் கிரக தரைப் பரப்பில் அதிக அளவிலான, உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற தாதுக்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள பசிபிக் நார்த்வெஸ்ட் தேசிய ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி ஷெர்ரி கேடி கூறியுள்ளார்.
இந்த ஆய்வின்போது எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பி மற்றும் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி ஆகிய முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர் ஆய்வுக் குழுவினர்.
மேலும் இந்த விண் கல் அமைப்பானது எப்படி உருவானது என்பதையும் தோராயமாக கூறியுள்ளனர்.