நடத்தையில் சந்தேகம்... 12 வருடங்களாக காதலியின் பேண்ட்டுக்கு 'கற்பு பூட்டு'ப் போட்ட காதலன்
மெக்சிகோ: காதலியின் நடத்தையில் கொண்ட சந்தேகம் காரணமாக கிட்டத்தட்ட 12 வருடங்களாக காதலியின் பேண்டிற்கு பூட்டு போட்ட காதலனை மெக்சிகோ போலீசார் கைது செய்தனர்.
மெக்சிகோவில் உள்ள விராகுருஷ் பகுதியில் வசித்து வரும் ஜகாட்லாமே என்ற 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 12 வருடங்களாக பேண்டிற்கு பூட்டுப் போட்டு கொடுமைப் படுத்தப் பட்டுள்ளார்.
இதனால் இயற்கை உபாதைகளுக்குச் செல்வதற்குக் கூட மிகவும் அவஸ்தைப் பட்ட அப்பெண், காதலருக்கு பயந்து வாழ்ந்துள்ளார்.
நடத்தையில் சந்தேகம்....
தனது 13 வயதில் தனது காதலன் ஆண்டோனியாவுடன் சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறார் இப்பெண். தற்போது 40 வயதாகும் இவரது காதலர், எங்கே தனது காதலி தன்னைத் தவிர வேறு ஆண்கள் யாருடனாவது தகாத உறவில் ஈடுபட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் அவரது பேண்டிற்கு 'கற்பு பெல்ட்' போட்டுள்ளார்.
இளம்பெண் மீட்பு...
இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று ஆண்டோனியாவைக் கைது செய்துள்ளனர். அவர் தனது காதலியின் பேண்டிற்கு அணிவித்திருந்த பூட்டைப் பார்த்து அதிர்ந்து விட்டனராம் போலீசார். பின்னர், ஆண்டோனியாவிடம் சாவியைப் பிடுங்கி அவரது பெல்ட் பூட்டைக் கழற்றி அவரை சுதந்திரப் படுத்தியுள்ளனர்.
நாய் பெல்ட்....
மீட்கப்பட்ட போது அப்பெண் மிகவும் பயந்து போய் காணப் பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பெண்ணிற்கு அணிவிக்கப் பட்ட பெல்ட் நாய்களின் கழுத்தில் மாட்டப்படும் பெல்ட் வகையைச் சேர்ந்ததாம்.
ஆச்சர்யம்...
காட்டுமிராண்டித் தனமாக காதலியின் பேண்டிற்கு பெல்ட் பூட்டு போட்டு விட்ட காதலர் மீது புகாரளிக்க சம்பந்தப்பட்ட பெண் மறுத்து விட்டாராம். இதுகுறித்து ஈகுபியோனியா பெண்கள் உரிமைக் குழுவைச் சேர்ந்த செயல் இயக்குநர் அரசெலி கோன்சாலஸ் கூறுகையில், அந்த நபரைக் கைது செய்த பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை அப்பெண் வலியுறுத்தவில்லை. இது அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றார்.
எச்சரிக்கை....
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆண்டோனியா சில மணி நேரங்களிலேயே விடுதலை செய்யப்பட்டான். மீண்டும் இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடக்கூடாது என அவனை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.