மெக்சிகோவில் கடும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சேதம்
குய்யரோ: மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 7.2 அலகுகள் பதிவாகி இருந்தது.
மெக்சிகோவின் மேற்கு பகுதியில் குய்யரோ மாகாணம் உள்ளது. நேற்று அங்குள்ள கடற்கரை நகரமான அகாபுல்கோவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனுடைய அதிர்வுகள் சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது.
இந்த அதிர்வு 30 வினாடிகள் நீடித்தது. வீடுகளில் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்து நொறுங்கின. 7.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளுக்குள் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் இறங்கி நின்றனர்.
நேற்று புனித வெள்ளி என்பதால் ஆபத்து எதுவும் நேரிடக்கூடாது என்று ஏசுபிரானிடம் மக்கள் பிரார்த்தனை செய்தனர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுதனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது செல்போனில் பதிவான சில காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் கட்டடச் சுவர்கள் இடிந்து விழும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 24 கி.மீட்டர் ஆழத்தில் உருவாகி இருந்தது. சேதவிவரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.