ரொனால்டின்ஹோவை 'குரங்கு' என்று இழிவாகப் பேசிய மெக்சிகோ அரசியல்வாதி!
மெக்சிகோ சிட்டி: கால்பந்து வீரர் ரொனால்டின்ஹோவை, வாலில்லாக் குரங்கு என்று விளித்து, இனவெறியுடன் பேசியுள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த கார்லோஸ் மானுவல் டிரெவினோ நூனஸ் என்ற அரசியல்வாதி.
இந்த அரசியல்வாதி தேசிய நடவடிக்கைக் கட்சி என்ற கட்சியைச் சேர்ந்த புள்ளி ஆவார். இவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான ரொனால்டின்ஹோவை மனிதக் குரங்கு என்று வர்ணித்துள்ளார்.
இவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அவரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று டிவிட்டர், பேஸ்புக்கில் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்து வருகின்றன.
ரொனால்டின்ஹோவைக் காணக் கூடிய கூட்டம்
மெக்சிகோ சிட்டியில் உள்ள குரடெரோ கால்பந்துக் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் ரொனால்டின்ஹோ கலந்து கொண்டார். அவரைக் காண பெரும் கூட்டம் கூடி விட்டது. போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.
பேஸ்புக்கில் பிதற்றல்
இதுகுறித்து நூனஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், நான் கால்பந்தை வெறுக்கிறேன். என்னால் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை.
இப்படியா மொய்ப்பார்கள்
இந்த விளையாட்டுக்காக போக்குவரத்தையும் கூட பலர் பாதிக்கிறார்கள். வெள்ளம் என கூடுகிறார்கள். இதை நான் வெறுக்கிறேன்.
வீட்டுக்குப் போக லேட்டாயிடுச்சே
நான் வீட்டுக்குப் போக 2 மணி நேரம் ஆகி விட்டது. எல்லாம் ஒரு மனிதக் குரங்கால் வந்த வினை. பிரேசில் நாட்டச் சேர்ந்த அதை வாலில்லாக் குரங்கு என்றுதான் கூற முடியும். வேறு எப்படிச் சொல்ல முடியும் என்று அநாகரீகமாக இனவெறியுடன் எழுதியிருந்தார் நூனஸ்.
கடுமையாக தண்டிக்க வேண்டும்
நூனஸின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. அந்த கால்பந்து கிளப்பும் கடுமையாக கண்டித்துள்ளது. நூனஸை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அது அழைப்பு விடுத்துள்ளது.
உலக சாம்பியன்
34 வயதான ரொனால்டின்ஹோ உலகின் சிறந்த கால்பந்து வீரராக 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். உலகக் கோப்பைப் போட்டியிலும் இவர் பிரேசிலுக்காக பிரமாதமாக விளையாடியவரும் கூட.