அடுத்தடுத்து 2 விபத்துகள்- விமான நிறுவனங்கள் சந்தித்துள்ள சவால்கள்
கோலாலம்பூர்: மலேசிய விமானங்கள் இரண்டு கொடூரமான விபத்துகளில் சிக்கியதைத் தொடர்ந்து விமான சேவை நிறுவனங்கள், பாதுகாப்பு துறை ஆகியவற்றில் பல மாற்றங்களைச் சந்திக்க நேரிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக மலேசிய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து அடுத்த விபத்தாக உக்ரைன் வான்வெளியில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த மலேசிய விமான விபத்துக்கள் விமானத்துறையின் சேவைகளில் பல்வேறு வகையான மாற்றங்களை கொண்டுவந்துள்ளன.
இந்திய விமான நிறுவனங்கள்:
ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஏர் இண்டியா நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு விமான சேவையை செய்கின்றன. தற்போது இவற்றை அவை நிறுத்தியுள்ளன.
உக்ரைன் வான்வெளி தவிர்ப்பு:
ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இண்டியா நிறுவன விமானங்கள் தற்போது உக்ரைனின் வான்வெளிப் பாதையை தவிர்த்து வருகின்றன. மேலும், ஸ்பைஸ் ஜெட்நிறுவனம், காபூல் விமானச் சேவையை நிறுத்திய காரணத்தினால் பதிவு செய்திருந்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளித்துவிட்டது.
சர்வதேச விமான நிறுவனங்கள்:
லுப்தன்சா, பிரிட்டிஷ் ஏர்வேஸ், கேஎல்எம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டெல்டா, எமிரேட்ஸ் ஆகிய சர்வதேச விமான சேவை நிறுவனங்களும் உக்ரைன் வான்வெளிப்பாதையை இச்சம்பவத்தின் காரணமாக தவிர்த்து விட்டன.
பாதை மாற்றப்பட்ட விமானங்கள்:
ஆசிய விமான நிறுவனங்களான ஏசியானா, கொரியன் ஏர், சீனா ஏர்லைன்ஸ், குவாண்டஸ் ஆகியவை உக்ரைன் கிளர்ச்சி ஆரம்பித்தபோதே அப்பாதையில் செல்லும் தங்களுடைய விமானங்களின் பாதையை மாற்றி அமைத்து விட்டன.
ஒருநாளைக்கு 300 :
இச்சம்பவத்திற்கு முன்னர் உக்ரைன் வான்வெளிப்பாதை வழியாக பயணிக்கும் விமானங்கள் ஒருநாளைக்கு 300 என்ற எண்ணிக்கையில் இருந்து வந்தது. இந்த சம்பவத்திற்கு பின்பாக அந்த பாதையே முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு விமானங்களின் எண்ணிக்கையும் 100 ஆக குறைந்து விட்டது. இதனால் அவ்வான்வெளியே வெறிச்சோடிப் போய் உள்ளது.
விமான சேவை நேரம்:
உக்ரைனின் வான்வெளிப்பாதையை தவிர்ப்பதால் ஆசியாவிலிருந்து, ஐரோப்பா செல்லும் விமானங்களின் காலநேரம் 20 நிமிடங்கள் அதிகரித்துள்ளது. இதனால் நேர அளவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
டிக்கெட் விலை/ முன்பதிவு:
விமான போக்குவரத்திற்கான தொலைவு அதிகரித்திருப்பதால் டிக்கெட் விலையும் அதிகரிக்குமா என்பதற்கு பதில் அவ்வளவாக இல்லை என்பதுதான். இதனால் நேரமும் 15 நிமிடங்களுக்கு மேலாக அதிகரிக்க வாய்ப்பில்லை என்பதால் கட்டணமும் உயரப் போவதில்லை. முன்பதிவு செய்தவர்களிலும் ரத்து செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
அபாயகரமான பகுதிகள்:
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியானது எந்த ஒரு அபாயகரமான பகுதியாகவும் முன்னர் அறிவிக்கப்படவில்லை. ஆனால், இச்சம்பவத்திற்குப் பின்னர் அப்பகுதியும் அபாயகரமான பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகள்:
அதேபோல ஈராக், சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்வெளிப் பகுதியும் அபாயகரமான வான்வெளியாக கருதப்படுகிறது. இந்த நாடுகளின் வான்பகுதியும் கூட பாதுகாப்பானது இல்லை என்று கூறப்படுகிறது. காரணம் இங்கு நடக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள்.
விமான காப்பீடு:
விமான விபத்துகளால் மிகவும் பெரிய மாற்றத்தையும், இழப்பினையும் சந்தித்துள்ளவை இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள்தான். இழப்பீடாக வழங்கப்பட்ட தொகையை ஈடுகட்டவே பலநாட்கள் ஆகும் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பயணிகளின் அச்சம் போக்க:
மொத்தத்தில் விமான பயணமே பயணிகள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் இச்சமயத்தில், பயணிகளின் அச்சம் தீர்க்க விமான நிறுவனங்கள் மாற்றங்களின் மத்தியில் சிக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.