மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம்: ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல்!
கிவ்: மலேசிய விமானத்தை தவறுதலாக சுட்டுவிட்டோம் என்று கிழக்கு உக்ரைனில் போராடும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இத்தாலிய நாளேடான "Corriere Della Sera" வுக்கு பெயரை வெளியிட விரும்பாத கிழக்கு உக்ரைன் கிளர்ச்சிகுழுவை சேர்ந்த ஒருவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
உக்ரைனின் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக எங்களது சீனியர்கள் சிலர் தெரிவித்தனர். அதன் பின்னர் விமானம் விழுந்த பகுதிகளை நோக்கி சென்றோம்.
5 வயதுக்கும் குறைவான பெண் குழந்தை ஒன்று முகத்தை பூமியில் புதைத்தபடி இறந்து கிடந்தது.. அந்த காட்சி ரொம்ப கொடூரமாக இருந்தது.
அப்போதுதான் நாங்கள் சுட்டு வீழ்த்தியது பயணிகள் விமானத்தை என்பதே தெரியவந்தது. பின்னர்தான் திரும்பிய இடமெல்லாம் உடல்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ந்தோம்.
உக்ரைன் விமானத்துக்கு குறிவைத்து தவறுதலாகவே மலேசிய பயணிகள் விமானத்தை சுட்டுவிட்டோம்.
இவ்வாறு ரஷ்யா ஆதரவு கிளர்ச்சி குழுவைச் சேர்ந்தவர் கூறியுள்ளார்.
முன்னர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது உக்ரைனே வீழ்த்தியது என்று ரஷ்யா குற்றம்சாட்டியது. இந்த நிலையில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே ஒப்புக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.