எம்.ஹெச்.17: துண்டு, துண்டாக உள்ள உடல்களை அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?
ஆம்ஸ்டர்டாம்: உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானத்தில் இருந்தவர்களின் உடல்கள் நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரபணு சோதனை மூலம் அவற்றை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
கடந்த 16ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உடல் சிதறி பலியாகினர்.
பலியானவர்களில் 40 பேரின் உடல்கள் 2 விமானங்கள் மூலம் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சடலங்கள்
சடலங்கள் நெதர்லாந்தில் உள்ள ஹில்வர்சம் என்ற இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு வைத்து மரபணு உள்ளிட்ட சோதனைகள் மூலம் உடல்களை தடயவியல் நிபுணர்கள் அடையாளம் காண உள்ளனர்.
200 பைகள்
பலியானவர்களின் உடல்கள், கை, கால் என்று சிதறிக் கிடந்த பாகங்கள் 200 பைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த உடல்கள், உடல் பாகங்களை வைத்து தான் அடையாளம் காணும் பணி நடக்க உள்ளது.
யார், யார் என
உடல்கள், பாகங்கள் யார், யாருடையது எந்த நாட்டவருடையது என்பது தெரியவில்லை. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று லேண்ட்லிஜிக் தடயவியல் குழுவைச் சேர்ந்த ஜாஸ் வான் ரூ தெரிவித்துள்ளார்.
இந்த குழு?
2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் பலியானவர்கள், 2010ம் ஆண்டு லிபியாவில் விபத்துக்குள்ளான அப்ரிகியா ஏர்வேஸ் விமான பயணிகளின் உடல்கள் மற்றும் நெதர்லாந்தில் நடந்த மேலும் சில சம்பங்களில் பலியானவர்களின் உடல்களை அடையாளம் காண உதவியது இந்த லேண்ட்லிஜிக் தடயவியல் குழு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஹெச். 17
பலியான பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எம்.ஹெச். 17 என்ற எண்ணை பயன்படுத்துவதை கடந்த 24ம் தேதி நிறுத்தியுள்ளது. இனி எந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கும் எம்.ஹெச். 17 என்ற பெயர் வைக்கப்படமாட்டாது.