மாயமாவதற்கு முன் நடுவானில் செல்போனில் பேச முயற்சித்த துணை விமானி... புதிய தகவல்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் அதன் துணை விமானி தனது செல்போனில் யாருடனோ பேச முயற்சித்துள்ளார் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி 5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜீங் சென்ற விமானம் நடுவானில் திடீரென மாயமானது. மாயமான விமானம் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விமானம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்து விபத்தில் சிக்கியதாக மலேசியா அறிவித்தது. ஆனபோதும், விமானம் பாதை மாறியது எவ்வாறு, விபத்தில் எப்படி சிக்கியது உட்பட பல கேள்விகளுக்கு விடை தேடப்பட்டு வருகிறது.
மாயமான விமானத்தின் கறுப்புப் பெட்டி கிடைத்தால் மட்டுமே இதற்கான தெளிவான பதில் கிடைக்கும் எனச் சொல்லப் படுகிறது. மாயமான விமானத்தின் கறுப்புப் பெட்டி இந்தியப் பெருங்கடல் பகுதியில் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது.
அவசர அழைப்பு....
இந்நிலையில், மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பினாங் தீவுக்கு மேலே விமானம் பறந்த போது, துணை விமானி, தனது செல்போன் மூலமாக யாருக்கோ அவசர அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாதியிலேயே இணைப்பு துண்டிப்பு...
ஆனால் விமானம் வேகமாக பறந்ததால் செல்போன் டவர் மாறியதால் இந்த இணைப்பு பாதியிலேயே துண்டிக்கப்பட்டதாகவும், எனினும் பரிக் அப்துல் ஹமிது யாருக்கு தொடர்பு கொண்டார் என்பதை கண்டறிய முடியவில்லை என்றும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
யாருக்கு போன் செய்தார்?
இந்த பகுதியில் பறந்த போது தான், விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது என்பதால், அவர் யாரையோ தொடர்பு கொள்ள முயன்றது தெளிவாகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தொடரும் மர்மம்....
இதற்கு முன்னர் விமானத்தின் தலைமை விமானிக்கு விமானம் புறப்படுவதற்கு முன்னர் மர்மப் போன் ஒன்று வந்ததாகவும், அதில் ஒரு பெண் பேசியதாகவும் சொல்லப்பட்டது. போலீசாரின் விசாரணையில் அந்தப் பெண் பேசிய செல்போன் எண் போலியான முகவரியில் வாங்கப் பட்டதும் கண்டறியப் பட்டது குறிப்பிடத்தக்கது.