இந்திய பெருங்கடலுக்கு அடியில் 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களா?
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச். 370 இந்திய பெருங்கடலில் விழுந்த இடத்தில் 58 பொருட்களை கண்டுபிடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.370 மாயமானது. பின்னர் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும் அதில் இருந்த 239 பேரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.
விமானம் விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் ஆஸ்திரேலியா தலைமையிலான குழு மாதக்கணக்கில் விமான பாகங்களை தேடி வருகின்றது.
சந்தேகம்
6 மாதங்களாக தேடியும் விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்காததால் விமானம் அங்கு தான் விழுந்ததா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
58 பொருட்கள்
இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடி வரும் குழு 58 பொருட்களை கடலுக்கு அடியில் கண்டுபிடித்துள்ளது. அந்த பொருட்களை எடுக்கும் முயற்சியில் ஆய்வு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தெரியவில்லை
கடலில் கிடந்த பொருட்கள் விமானத்தின் பாகங்களா அல்லது பாறைகளா என்பதை அவற்றை ஆய்வு செய்த பிறகே கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பும் கூட
விமானம் மாயமான புதிதில் கடலில் பல பொருட்கள் மிதந்ததை ஆய்வு குழு கண்டெடுத்தது. ஆனால் அவை மீனவர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் என்பது தெரிய வந்தது.