ஐ.நா. பேச்சு... நவாஸை தூக்கி சாப்பிட்டு விட்டார் மோடி - பாக். பத்திரிகை பாராட்டு
இஸ்லாமாபாத்: ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் பேச்சு அனைவரையும் வசீகரிக்கும் வகையில் அமைந்திருந்ததாக பாராட்டியுள்ளது பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று. மேலும், அதே கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் அதிபர் பேச்சு அவ்வளவாக சொல்லிக் கொள்ளும் படி இல்லை எனவும் அதில் விமர்சிக்கப் பட்டுள்ளது.
நேற்று பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையான டெய்லி டைம்ஸ் 'ஐ.நா.-வில் மோடி' என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை காட்டிலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து வகையிலும் அனைவரையும் வசீகரித்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது :-
மோடியின் பேச்சு...
ஐ.நா.வில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்ட நரேந்திர மோடி, அவரது பேச்சில் தனது நாட்டின் பண்டைய கலாச்சாரத்தை கேட்போருக்கு உண்ர்த்தும் விதமாக பேசினார். அமெரிக்க மக்களும் இந்தியக் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளும் விதத்தில் மோடி பேசினார்.
ஷெரீப்பின் குறுகிய மனப்பான்மை...
ஆனால், ஷெரீப் மிகவும் குறுகிய மனப்பான்மை உடையவராக தோற்றமளித்தார். நரேந்திர மோடி பெற்றிருந்த அனைத்தும் ஷெரீபிடம் காண முடியவில்லை என்பதை பாகிஸ்தான் மக்களே உணர்ந்தனர்.
காஷ்மீர் பிரச்சினை...
முக்கியத்துவத்தைத் தாண்டி, பாகிஸ்தான் குறித்து மோடி பெரிதாக பேசவில்லை. அவரது பேச்சில், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள், சில கொள்கைகளை சாதிக்கும் நோக்கத்துடன் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டிப் பேசினார். பயங்கரவாதத்துக்கு அளிக்கும் ஆதரவால், பாகிஸ்தான் பலவற்றை இழந்ததையும் அவர் குறிப்பிட்டார்.
பொதுப்படைத் தன்மை...
இதனைத் தவிர, முழுக்க முழுக்க இந்தியாவின் மக்கள்தொகை, அதனால் இருக்கும் பலன்கள், உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவம், பருவநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு என பல விஷயங்களில் அவரது பேச்சில் பொதுப்படைத் தன்மை இருந்தது" என அப்பத்திரிக்கை பாராட்டியுள்ளது.
குற்றச்சாட்டு..
அதேசமயம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது பேச்சில் அனைத்து நாடுகளையும் வசீகரிக்கவில்லை என்றும், பாகிஸ்தானின் முக்கியத்துவங்களை அவர் குறிப்பிடத் தவறியதாகவும் அந்நாட்டுப் பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.