‘வணக்கம் டாக்டர் ராஜன்’... அமெரிக்காவில் தமிழர் பெருமை பேசிய பிரதமர் மோடி!
வாஷிங்டன்(யு.எஸ்): மேரிலாண்ட் மாகாண துணைச் செயலர் டாக்டர் ராஜன் நடராஜனைச் சந்தித்த போது, வணக்கம் என்று சொன்னதோடு, தமிழர்களைப் பற்றி உயர்வாகப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியுடன், மேரிலாண்ட் கவர்னர் மார்ட்டின் ஓ மலேவின் பிரத்தியேக சந்திப்பில், அம்மாநில துணைச் செயலாளர் டாக்டர் ராஜன் நடராஜனும் பங்கேற்றார்.
குஜராத் முதல்வராக இருந்த போதே, பிரதமர் மோடிக்கு டாக்டர் ராஜன் நன்கு அறிமுகமானவர், பல தடவை குஜராத்திற்கு சென்று, சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டாக்டர் ராஜன் தமிழகத்தை சார்ந்தவர் என்பதும் பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும்
வணக்கம் டாக்டர் ராஜன்
இந் நிலையில் நேற்று நடந்தி பிரதமர் - கவர்னர் சந்திப்பின் போது, டாக்டர் ராஜனைப் பார்த்ததும் 'வணக்கம்' என்று சொல்லி ஆச்சரியப்படுத்தியுள்ளார். பதிலுக்கு டாக்டர் ராஜனும் 'தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்' என்பதை ‘கெம் சோ' என்று குஜராத்தி மொழியில் கேட்டு பரஸ்பர அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். டாக்டர் ராஜனிடம் பிரதமர் காட்டிய நட்பைக் கண்டு வியந்த கவர்னர் தன்னுடைய மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் மீது நன்மதிப்பு
தான் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற போது தமிழில் ஒரிரு வார்த்தைகள் பேசியதையும், தமிழரின் அடையாளமான வேட்டி அணிந்ததையும் நினைவுபடுத்திய பிரதமர், தமிழர்களின் கடின உழைப்பும், அறிவுக் கூர்மையும் தனக்கு அவர்கள் மீதான நன்மதிப்பிற்கு காரணம் என்று குறிப்பிட்டார்.
2011 ல் குஜராத் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடி, டாக்டர் ராஜனிடம், மேரிலாண்டின் புகழ்பெற்ற ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை குஜராத்தில் தொடங்குவதற்கான சாத்தியங்கள் குறித்து என்று கேட்டறிந்தார். நேற்றைய சந்திப்பின் போது அதை டாக்டர் ராஜன் நினைவு கூர்ந்தார். அது குறித்து இருவரும் மீண்டும் கலந்தாலோசித்தனர்.
கவர்னர் மார்ட்டின் ஓ மலே வுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது அனைத்துப் பள்ளிகளிலும் யோகாவை அறிமுகப்படுத்துமாறு யோசனை வழங்கிய விடுத்த பிரதமர், இதன் மூலம் அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் கணிசமாககி குறையும் என்று கருத்து தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துக்காடு என்ற சிற்றூரில் பிறந்த டாக்டர் ராஜன் நடராஜன், அமெரிக்காவில் உயர் பதவில் இருக்கும் முதல் தமிழர் ஆவார்.