மோடியை உரையாற்ற அழைக்க வேண்டும்.... அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவது என்பது வெளிநாட்டு தலைவர்களுக்கு அமெரிக்கா அளிக்கும் மிக உயரிய கவுரமாக கருதப்படுகிறது.
குஜராத் கலவரம் காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேல் மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்த அமெரிக்கா, தற்போது அவர் பிரதமராக பதவியேற்றதும் நாட்டின் உயரிய கவுரவத்தை அளிக்க முன்வந்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானத்தை நேற்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் செனட் சபை உறுப்பினர்கள் மார்க் வார்னர், ஜான் கார்யென், டிம் கைனே, ஜிம் ரிஷ் ஆகியோர் கொண்டுவந்தனர்.
அப்போது, ‘இரு நாடுகளுக்கு இடையில் ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கூட்டுக் கூட்டத்தில் மோடியை உரையாற்ற அழைக்க வேண்டும்' என அவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். மேலும், இதன் மூலம் இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த முடியும் என அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
மோடி பிரதமராக பதவியேற்றதற்குப் பின்னர் முதன்முறையாக, இருநாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தற்போது இந்தியா வந்துள்ளார். இன்று மோடியைச் சந்தித்து அவர் பேசவுள்ளார். அப்போது அமெரிக்கா வருமாறு மோடியை அவர் அழைப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வந்துள்ள சூழ்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடி குறித்த இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.