மற்ற மத மக்களை கொல்வதை இஸ்லாம் அனுமதிக்காது- ஐஎஸ்ஐஎஸ்க்கு மொயீன் அலி கண்டனம்!
லண்டன்: மக்களைக் கொன்று குவிக்கும் ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இங்கிலாந்து வீரர் மொயீன்அலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிரியா, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்ட்வன் சாட்லாப் ஆகிய இருவர் தலையை துண்டித்து கொன்றனர்.
தலையைத் துண்டித்து கொலை:
இதன் தொடர்ச்சியாக சிரியாவில் பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்த இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெயஸ் என்பவரையும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தலையை துண்டித்து படு கொலை செய்தனர்.
கிரிக்கெட் வீரர் கண்டனம்:
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இந்த செயலுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன்அலி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இஸ்லாம் அனுமதிக்காது:
"ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் இந்த செயலை இஸ்லாம் அனுமதிக்காது. அந்த அமைப்பின் நடவடிக்கைகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது.
மக்களை கொல்வது தவறு:
மற்ற மதத்தின் மக்களை கொல்வது கண்டனத்துக்கு உரியதாகும். இங்கிலாந்தில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.
காசாவுக்கு ஆதரவு:
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த மொயீன் அலி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது காசாவுக்கு ஆதரவாக பேண்ட் அணிந்த வாசகத்துடன் ஆடி இருந்தார்.
நடுவர் எச்சரிப்பு:
இதற்காக அவர் ஐசிசியால் எச்சரிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.