வெள்ளை மாளிகையில் விருந்து கொடுத்த ஒபாமா: வெந்நீர் மட்டும் குடித்த மோடி
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு மோடி பகவத் கீதையை பரிசாக அளித்தார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி திங்கட்கிழமை பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி, ஐபிஎம் தலைவர் வெர்ஜினியா ரொமெட்டி உள்ளிட்ட 11 பிரபல அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓக்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு மோடி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவர் வெள்ளை மாளிக்கைக்கு சென்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை சந்தித்து பேசினார்.
கெம் சோ
மோடியை பார்த்த ஒபாமா குஜராத்தில் கெம் சோ(நலமா) என்று கேட்க அவர் பதிலுக்கு ஆங்கிலத்தில் நலம், நன்றி மிஸ்டர் பிரசிடென்ட் என்று தெரிவித்துள்ளார்.
கீதை
மோடி ஒபாமாவுக்கு ஸ்பெஷல் எடிஷன் பகவத் கீதையை பரிசளித்தார். அந்த கீதை டெல்லியில் தயார் செய்யப்பட்டது.
விருந்து
வெள்ளை மாளிகையில் ஒபாமா மோடிக்கு தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மோடி நவராத்திரியையொட்டி விரதம் இருப்பதால் சாப்பிடாமல் வெந்நீர் மட்டும் குடித்தார். ஒபாமாவை பார்த்து நீங்கள் சாப்பிடுங்கள் என்று மோடி தெரிவித்துள்ளார்.
மிஷல்
விருந்தில் மிஷல் ஒபாமா கலந்து கொள்ளவில்லை. ஆனால் துணை அதிபர் ஜோ பிடென், வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பல விஷயம்
90 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது ஒபாமாவும், மோடியும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர். அவர்கள் இம்முறை தான் முதன்முதலில் நேருக்கு நேர் சந்தித்து பேசியுள்ளனர்.
இன்றும்
மோடியும், ஒபாமாவும் இன்றும் சந்தித்து இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிண்டன்
மோடி முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவி ஹில்லாரி ஆகியோரையும் சந்தித்து பேசினார்.