கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிட வருமாறு ரஷ்ய அதிபருக்கு மோடி அழைப்பு
போர்டலிசா: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்ய உதவியுடன் தமிழகத்தின் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு வருகை தருமாறு புட்டினுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
சீன அதிபருடன் சந்திப்பு
பிரேசிலில் நடைபெற்றுவரும் இந்தியா, ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள நரேந்திரமோடி நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
புட்டினுடன் ஆலோசனை
இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினையும், மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது.
கூடங்குளத்துக்கு அழைப்பு
அப்போது, ரஷ்ய நாட்டு உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை பார்வையிட வருமாறு புட்டினுக்கு, மோடி அழைப்புவிடுத்தார்.
நல்ல யோசனை மிஸ்டர் மோடி
இந்த அழைப்பை பரிசீலிப்பதாக கூறிய புட்டின், இது ஒரு நல்ல யோசனை என்றும் பாராட்டு தெரிவித்தார். இந்தியா-ரஷ்யா இடையேயான நட்புக்கு, அணுமின் நிலைய ஒத்துழைப்பு ஒரு உதாரணம் என்றும் புட்டின் குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற அறுதி பெரும்பான்மைமிக்க வெற்றிக்காக மோடிக்கு புட்டின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புட்டினுக்கு மோடி பாராட்டு
பிரிக்ஸ் மாநாட்டில், புட்டின் ஆற்றிய உரையை வெகுவாக பாராட்டிய மோடி, புட்டினின் உரையின்போது, ஐக்கிய சபையின் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியத்தை புட்டின் நன்கு எடுத்துரைத்ததாக மோடி கூறியுள்ளார்.
டிசம்பரில் வருகை
டிசம்பர் மாதம் புட்டினின் இந்திய வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்தியா, ரஷ்யாவுடன் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை அளித்துவந்துள்ளதையும் மோடி நினைவுபடுத்தியுள்ளார். இந்தியாவிலுள்ள குழந்தைக்கு கூட ரஷ்யாதான் தங்களது நட்பு நாடு என்று தெரியும் என்றும் மோடி சுட்டிக்காண்பித்தார்.
பயத்தை போக்க
கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானதாக இல்லை என்று உதயகுமார் தலைமையில் சுற்றுவட்டார ஊர்மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், ரஷ்ய அதிபரையே அந்த அணுமின் நிலையம் இருக்கும் பகுதிக்கு அழைத்து வந்து மக்களின் அச்சத்தை போக்க மோடி திட்டமிட்டுள்ளது இதில் இருந்து தெரிகிறது.