ஸ்கூலைக் கட் அடித்து விட்டு மோடியைப் பார்க்க வந்த குட்டீஸ்... போட்டோவும் எடுத்துக் கொண்டனர்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஊழியர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, அவர்களது குழந்தைகளுடன் உற்சாகமாக புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
அமெரிக்க பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு விருந்தோம்பல்கள், சந்திப்புகளில் பிசியாக இருக்கிறார். துணை ஜனாதிபதி ஜோ பிடன் கொடுத்த மதிய உணவு விருந்தில் கலந்து கொண்ட அவர், அதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கொடுத்த விருந்திலும் கலந்து கொண்டார்.
மேலும் வாஷிங்டனில், இந்திய அமெரிக்க சமூகத்தினரையும் அவர் சந்தித்து உரையாடினார். இந்தியத் தூதரகத்திற்கு வெளியே கூடியிருந்த இந்தியர்களைப் பார்த்து அவர் கையசைத்தார்.
இந்தியத் தூதரகத்திற்குள் அவர் தூதரக அதிகாரிகளுடன் தனித் தனியாக பேசினார். கை குலுக்கினார். போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார். தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் தூதர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
மேலும் பல தூதரக ஊழியர்களின் பிள்ளைகள், பள்ளிக்கூடத்தைக் கட் அடித்து விட்டு மோடியைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுடனும் ஜாலியாகப் பேசினாராம் மோடி. மோடியுடன் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும் வந்திருந்தார்.
தற்போது மோடி உபவாசம் இருக்கிறார். இருந்தாலும் அவரது முகத்தில் எந்த சோர்வும் இல்லை. நியூயார்க், ஐ.நா. கூட்டம் ஆகியவற்ற முடித்து விட்டு தற்போது வாஷிங்டனுக்கு வந்துள்ளார் மோடி. பல்வேறு நிகழ்ச்சிகள், சந்திப்புகளுக்கு இங்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நேற்று மேரிலாண்ட் ஆளுநர் மைக்கேல் ஓ மாலியை சந்தித்தார் மோடி. அவரே நேரடியாக மோடியைச் சந்திக்க வந்திருந்தார். நியூயார்க் போயிருந்தபோது அங்கு நியூஜெர்சி ஆளுநர் கிறிஸ்கிறிஸ்டி, தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி ஆகியோரும் மோடியைச் சந்தித்தனர்.