'உக்ரைன் உக்கிரம்'... ரஷ்யாவுடன் விண்வெளி நிலைய உறவைத் தவிர மற்றதை ரத்து செய்த நாஸா!
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யாவுடனான அனைத்து தொடர்புகளையும் அமெரிக்காவின் நாசா நிறுத்தி வைததுள்ளது. இருப்பினும் சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பாக மட்டும் ரஷ்யாவுடன் அது இணைந்து செயல்படுமாம்.
ரஷியாவில் இருந்து ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்க்வார்ட்சோவ், ஓலக் ஆர்டம்யவ் மற்றும் அமெரிக்காவின் நாஸாவைச் சேர்ந்த ஸ்டீவன் ஸ்வான்சன் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வான்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் சென்ற விண்கலம் நேற்று வெற்றிகரமாக சர்வதேச ஆராய்ச்சி விண்கலத்தை போய் சேர்ந்தது. சர்வதேச ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்ற வீரர்கள், இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். அங்கு அவர்கள் சில மாதங்கள் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சியில் மட்டும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா அறிவித்துள்ளது.
மேலும் 2017ம் ஆண்டு முதல் பஅமெரிக்க விண்வெளி வீரர்கள் அமெரிக்க விண்வெளித்தளத்தில் இருந்து மட்டுமே விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், ரஷ்ய விண்வெளித் தளங்களோ, ராக்கெட்களோ பயன்படுத்தப்படாது என்றும் நாஸா அறிவித்துள்ளது.
2011ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் ஷட்டில் விண்வெளிக் கலங்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டையடுத்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப ரஷ்ய ராக்கெட்கள், சோயுஸ் விண்வெளிக் கலங்களைத் தான் அமெரிக்கா சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தொழில்நுட்பத்துடனான விண்வெளிக் கலங்களை அமெரிக்கா பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளது.