7 ஆண்டுகளுக்குப் பின் சடலமாக மீட்கப் பட்ட பாட்டி... சொத்துக்காகப் போராடும் உறவுகள்
சிட்னி: கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன் மரணமடந்த பெண் ஒருவரின் சடலம் பாழடைந்த அவரது வீட்டில் மீட்கப் பட்ட வழக்கு விசாரணைக்காக வந்துள்ளது. தனது உறவினர் உயிருடன் உள்ளாரா அல்லது இறந்து விட்டாரா என அக்கறைக் காட்டாத அவரது உறவினர்கள், தற்போது அவரது சொத்துக்காக மட்டும் உரிமைக் கொண்டாடுகிறார்களாம்.
கடந்த 1924-ம் ஆண்டு பிறந்த, நடாலி எனப் பெயர் கொண்ட அந்தப் பெண்மணி சிட்னியில் உள்ள இன்னர் சிட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். நடாலி தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையிலேயே கழித்துள்ளார். இதனால், அவரது அக்கம்பக்கத்தார் கூட இவரது நடவடிக்கைகளைக் கவனிக்கவில்லையாம்.
இந்நிலையில், அவரது உடல் கடந்த 2011ம் ஆண்டு அவரது பாழடைந்த வீட்டில் இருந்து மீட்கப் பட்டது. விசாரணையில் அவர் 2004ம் ஆண்டு மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளதாம்.
நோய்வாய்ப் பட்ட நடாலி, கீழே விழுந்தபின் எழுந்திருக்க முடியாமல் அப்படியே மரணமடைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவரது உடல் அவருக்கு சொந்தமான மாடி வீட்டில் அவர் கண்டெடுக்கப்பட்டபோது, அவ்வீடு மிகவும் பாழடைந்து கிடந்ததாகவும், வீட்டில் ஒட்டடை படிந்து கிடந்ததாகவும், வீட்டின் ஜன்னலுக்கு மேலே மரம் ஒன்று வளர்ந்து வருவதாகவும் போலீசார் தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.
மேலும், அவரது வீட்டில் டி.வி மற்றும் பிரிட்ஜ் போன்ற பொருட்கள் எதுவும் காணப்படவில்லை எனவும், அவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் திருடப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனது வீட்டை அவர் காலி செய்துவிட்டதாக கருதியதாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடாலியின் உறவுக்காரப் பெண் ஒருவர் கூறுகையில், ‘ஏனோ, தெரியவில்லை எங்களுக்கிடையே பேச்சுவார்த்தை இல்லை. நடாலியைக் கடைசியாக கடந்த 2004ம் ஆண்டு பேருந்து ஜன்னல் அருகே பயணம் செய்து கொண்டிருந்தபோது பார்த்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.
நடாலியின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டாத அவரது உறவுகள், தற்போது அவர் இறந்து விட்டார் எனத் தெரிந்ததும் சொத்துக்காக உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இது குறித்து கிளெப்பில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடை பெற்று வருகிறது. நடாலியின் மரணத்தை அங்குள்ள பத்திரிக்கைகள், ‘மறந்து போன பெண்' எனக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளன.