ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க கிழக்கு ஐரோப்பாவில் குவிக்கப்படும் நேட்டோ படைகள்
வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் தயார் நிலையில் வைக்க மும்முரமாகி வருகின்றன.
உக்ரைனின் கிரீமியா, ரஷ்யாவுடன் இணைந்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனிலும் கிளர்ச்சி ஏற்பட்டது. கிழக்கு உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் உக்ரைனின் அனுமதி இல்லாமலேயே கிழக்கு உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்ட லாரிகளை நூற்றுக்கணக்கில் ரஷ்யா அனுப்பியது. பின்னர் உலக நாடுகள் எதிர்பால் ரஷ்யா பின்வாங்கியது.
தற்போது 2 வாரத்துக்குள் உக்ரைன் தலைநகர் கிவீயை கைப்பற்றிவிடுவேன் என்று ரஷ்யா அதிபர் புதின் மிரட்டியுள்ளார். இதேபோல் உக்ரைன் தலைவர்களும் ரஷ்யாவுடன் ஒரு மிகப் பெரிய யுத்தம் நடைபெறக் கூடும் என்று எச்சரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு உதவும் வகையில் நேட்டோ படைகள் களமிறங்க திட்டமிட்டுள்ளன. ரஷ்யாவை ஒட்டிய கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் 48 மணி நேர அறிவிப்புக்குள் 4 ஆயிரம் துருப்புகளை இறக்கும் வகையிலான வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
வேல்ஸில் இந்த வாரம் நடைபெறும் நேட்டோ தலைவர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது. இதனால் உக்ரைன் - ரஷ்யா பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.