அதிகாரத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் ஆட்சியைக் கவிழ்க்க மாட்டோம் - பாக். ராணுவம் மிரட்டல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கான் கட்சியினரால் இந்த பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ராணுவப் புரட்சி மீண்டும் வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் ராணுவத்தின் மீது அனைவரின் கண்களும் படிந்துள்ளன.
ஆனால் ராணுவப் புரட்சி நடக்காது என்று பாகிஸ்தான் ராணுவம், பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்குப் பதில் ஆட்சி அதிகாரத்தை தங்களுடன் ஷெரீப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ராணுவம் கூறியுள்ளதாம்.
ராணுவம் மற்றும் ஷெரீப் அரசுக்கு இடையே நடந்து வரும் ரகசியமான பேச்சுவார்த்தையில் இடம் பெற்ற மூத்த அரசு அதிகாரி ஒருவர் இதைத் தெரிவித்துள்ளார்.
ராணுவ தளபதியிடம் தூதர்களை அனுப்பிய ஷெரீப்
இம்ரான் கான் கட்சியினரால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ராணுவத் தலைமைத் தளபதியிடம் தனது தூதர்கள் இருவரை அனுப்பினார் ஷெரீப்.
ராணுவத்தின் ஆதரவு உள்ளதா....
இம்ரான் கான் மற்றும் மத குரு தாஹிர் அல் குவாத்ரி ஆகியோரின் இணைந்த போராட்டத்தை ராணுவம் தான் தூண்டி விட்டுள்ளதா, அதை ஆதரிக்கிறதா, புரட்சி நடத்தும் திட்டம் உள்ளதா என்பது குறித்து இந்தத் தூதர்கள் ராணுவத் தளபதியிடம் கேட்டுள்ளனர்.
புரட்சியெல்லாம் இல்லை.. ஆனால் பவர் தேவை
அப்போது அவர்களிடம் புரட்சி நடத்தும் திட்டத்தில் ராணுவம் இல்லை என்று ராணுவத் தளபதி தெரிவித்தாராம். அதேசமயம், அரசு தப்பிப் பிழைக்க வேண்டும் என்றால் ராணுவத்திற்கும் அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என்று அவர் கூறினாராம்.
ஆயிரக்கணக்கானோர் முற்றுகை
இந்த நிலையில் இம்ரான் கான் தலைமையில் பல ஆயிரம் பேர் தலைநகர் இஸ்லாமாபாத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர். அதி தீவிர பாதுகாப்புப் பகுதியாக கருதப்படும் நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியை அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே குழுமியுள்ளனர். தடுப்புகளைத் தகர்த்தெறிந்து இவர்கள் வந்து குழுமியுள்ளனர்.
அமைதியாக வேடிக்கை பார்க்கும் பாதுகாப்புப் படையினர்
இந்த அமளி துமளியை ராணுவம் தடுக்கவில்லை. மாறாக அமைதியாக வேடிக்கை பார்க்குமாறு உத்தரவுகள் வந்துள்ளனவாம். எனவே ராணுவத்தினர் அமைதியாக இருக்கிறார்கள்.
பேச வருமாறு ராணுவம் அழைப்பு
இதற்கிடையே ராணுவச் செய்தித் தொடர்பாளர் ஆசிம் பஜ்வா ஒரு டிவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம்தான் நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
ஷெரீப் மீது ராணுவத்துக்கு என்ன கோபம்
எப்போதுமே ஷெரீப் அரசுக்கும், ராணுவத்திற்கும் ஒத்துப் போகாது. பல விஷயங்களிலும் இரு தரப்பும் சுமூகமாக இருந்ததில்லை. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது முதலே ராணுவத்துடன் உரசியபடிதான் இருந்தார் ஷெரீப். குறிப்பாக முன்னாள் சர்வாதிகாரியும், முன்னாள் ராணுவத் தளபதியுமான முஷாரப்பை விசாரணைக் கூண்டில் அவர் நிறுத்தியதை ராணுவம் ரசிக்கவில்லை.
ராணுவப் புரட்சிக்குப் பலியானவர்
ஏற்கனவே 1999ம் ஆண்டு இதே முஷாரப்தான், நவாஸ் ஆட்சியை புரட்சி மூலம் கவிழ்த்து ஆட்சிக்கு வந்தவர். எனவே ராணுவத்திற்கும், ஷெரீப்புக்கும் ஆகவே ஆகாது. அதை விட முக்கியமாக இந்தியாவுடன் அனுசரணையாக போக வேண்டும் என்று கருதுபவர் ஷெரீப். இதுவும் ராணுவத்திற்குப் பிடிக்காத விஷயம்.
இம்ரானுக்கு ராணுவம் மறைமுக ஆதரவு
இந்த நிலையில்தான் இம்ரான் கான் போராட்டத்தை அறிவித்தார். அது முதலே அவருக்கு ராணுவம் மறைமுக ஆதரவு தருவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. ராணுவத்தின் ஆதரவு இருப்பதால்தான் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் அளவுக்கு இம்ரான் கான் கட்சியினரை ராணுவம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இந்தியாவுடன் நெருங்குவதால்
மோடி பிரதரமானதும், ஷெரீப்பை பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருந்தார். இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் நல்லுறவு ஏற்படும் முயற்சிகளும் நடக்க ஆரம்பித்தன. இதையும் ராணுவம் விரும்பவில்லை. முன்பு கூட வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ஷெரீப்பும் அவரும் மிகவும் இணக்கமாக பழகி வந்தனர். அமைதிப் பேச்சுக்களும் சூடு பிடித்திருந்தன. இரு நாடுகளும் இணைந்தால் கூட நல்லது என்ற அளவுக்கு நிலைமை மாறி வந்தது. ஆனால் அப்போதுதான் திடீரென முஷாரப் குறுக்கிட்டு கார்கிலில் போரைத் தூண்டி விட்டு நிலைமையை நாசமாக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
மீண்டும் ராணுவம் ஆட்சிக்கு வருமா
தற்போதைய சூழ்நிலையில் உடனடியாக இல்லாவிட்டாலும் கூட கூடிய விரைவில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்தின் கைக்குப் போகலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.