பெண்கள், குழந்தைகளைக் கேடயமாக பயன்படுத்தும் இம்ரான் கட்சி - நவாஸ் மகள் வேதனை
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் முன் வரிசையில் பெண்களையும், குழந்தைகளையும் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே போலீஸார் போராட்டக்காரர்கள் மீது எந்தவிதமான தாக்குதலையும் பயன்படுத்த வேண்டாம் என்று தனது தந்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளதாக நவாஸின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ரெட் ஸோன் என்று அழைக்கப்படும் அதிக உயர் பாதுகாப்பு வளையப் பகுதிக்குள் தடையை மீறி இம்ரான் கட்சியினர் புகுந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே குழுமியுள்ளனர். இப்பகுதியின் பாதுகாப்பை ராணுவத்திடம் ஒப்படைத்துள்ள போதிலும் ராணுவம் எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.
இந்த நிலையில் போலீஸார் எந்தவிதமான தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஷெரீப் உத்தரவிட்டுள்ளதாக அவரது மகள் மரியம் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பெண்கள் குழந்தைகள்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், பேரணியில் பெண்களும், குழந்தைகளும் முன்வரிசையில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே போலீஸார் எந்தவிதமான தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
ராணுவத்தின் வசம் ரெட் ஸோன்
இதற்கிடையே, நவாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ரெட் ஸோன் பகுதியை ராணுவத்திடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.
ஷெரீப் - ராணுவத் தளபதி
பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள், ராணுவத் தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மாளிகை
ரெட் ஸோன் பகுதியில்தான் பாகிஸ்தான் அதிபரின் இல்லம், பிரதமரின் இல்லம் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், தூதரக அலுவலகங்கள் என அனைத்து முக்கிய கட்டடங்களும் உள்ளன.
மாலை வரை கெடு
முன்னதாக இன்று மாலை வரை இம்ரான் கான், ஷெரீப்புக்குக் கெடு விதித்துள்ளார். மாலைக்குள் ஷெரீப் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம், நாடாளுமன்றத்துக்குள் நுழைவோம் என்று இம்ரான் கான் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.