ஐ.எஸ்.ஐஎஸ். இயக்கத்தை ஒடுக்க சிரியாவிலும் வான்வழித் தாக்குதல்: ஒபாமா அறிவிப்பு
வாஷிங்டன்: ஈராக்கைப் போல சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிராக வான் வழி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.
ஈராக், சிரியா நாடுகளில் பெரும் பகுதியை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அந்தப் பகுதிகளை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
ஈராக்- சிரியா எல்லைகளைத் தகர்த்து இருநாடுகளையும் ஒன்றாக்கி வைத்துள்ளனர். இந்த பகுதிகளை மீட்பதற்காக ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
ஒபாமா உரை
இதனிடையே இன்று அமெரிக்கா அதிபர் ஒபாமா அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவரது உரை விவரம்:
வான்வழித் தாக்குதல்
உலகில் தீவிரவாதிகள் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களை ஒடுக்க வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அமெரிக்கா, பிரிட்டனுக்கு அச்சுறுத்தல்
ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுத குழுவினரால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்களுக்கு அச்சுறுத்ததல் இருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.
நிதி உதவியை தடுப்போம்
ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுத குழுவினருக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் ஒடுக்கப்படாவிட்டால் உலகம் முழுவதும் பரவி தாக்குதல்கள் நடத்துவார்கள்,
500 ராணுவ வீரர்கள்
அத்துடன் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக ஈராக்குக்கு மேலும் 500 அமெரிக்கா ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.
இவ்வாறு ஒபாமா கூறினார்.