ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க தரைப்படை ஈராக் போகாது- ஒபாமா திட்டவட்டம்
வாஷிங்டன்: ஈராக்கிலும், சிரியாவிலும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க தரைப்படை அனுப்பப்படமாட்டாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஈராக் அரசுக்கு எதிராக செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அக்கிரமங்கள் அத்துமீறி செல்ல ஆரம்பித்ததும், அமெரிக்கா தனது விமானப் படையை அனுப்பி தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை தொடங்கியது.
ராணுவ அதிகாரி கருத்து
இந்நிலையில் அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி ஒருவர் இரு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், அமெரிக்க தரைப்படையை ஈராக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதிபருக்கு நான் சிபாரிசு செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார்.
அமெரிக்கா நினைத்தால் முடியும்
ஆனால், புளோரிடாவில் உள்ள விமானப்படை தளத்தில் பேட்டியளித்த ஒபாமா, ஈராக்கிற்கு அமெரிக்க தரைப்படை அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இதே கருத்தை அவர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். "அமெரிக்கா நினைத்தால் எந்தவித நிலைமையையும் மாற்ற முடியும் என்பதை கடந்த பத்தாண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். இருப்பினும், ஈராக்கிற்கு தரைப்படையை அனுப்பி வைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை" என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கே தலைமை பண்பு
மேலும் அவர் கூறுகையில், "40க்கும் மேற்பட்ட நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க உறுதியேற்றுள்ளன. ஆனால் அந்த நாடுகள் நேரடியாக விமான தாக்குதலை நடத்த உள்ளதாக அறிவிக்கவில்லை. அவர்களுக்கும் சேர்த்து அமெரிக்கா தாக்குதல் நடத்த முடியாது. ஆனால் அமெரிக்காவுக்குதான் இந்த நாடுகளை தலைமை தாங்கும் பண்பு உள்ளது. அமெரிக்காவால்தான் ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புக்கு எதிராக அணி திரட்டும் வலிமை உள்ளது.
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் உள்ளது
ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததுமே, அமெரிக்காவுக்கு இருக்கும் அச்சுறுத்தல் விலகி விட்டது என்று நாம் கருதவில்லை. அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டுள்ளது. அமெரிக்கா ராணுவ பலத்தால் மட்டுமல்ல மனிதாபிமானத்தாலும் முன்னேறிய நாடுதான். அமெரிக்காவை விமர்சனம் செய்யும் நாடுகள் கூட தங்களுக்கு ஒரு உதவி தேவையென்றால் அமெரிக்காவைத்தான் எதிர்பார்க்கின்றன", என்று ஒபாமா தெரிவித்தார்.