மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது- புதினுடன் ஒபாமா பேச்சு!
நியூயார்க்: மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் ரஷ்யா அதிபர் புதினுடன், அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா பேசியுள்ளார்.
உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷ்யாவுக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் உள்ளது. உக்ரைனில் உள்ள கிரிமியா பகுதி அண்மையில் தனிநாடாக பிரகடனம் செய்து ரஷ்யாவுடன் இணைந்தது.
யுத்த பூமி கிழக்கு உக்ரைன்
கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களும் தன்னாட்சி பிரகடனம் செய்து விட்டு ரஷ்யாவுடன் இணைய விரும்புகிறார்கள். இதற்காக உக்ரைன் அரசுப்படைகளுடன் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்யா ஆதரவுடன்..
கடந்த ஒரு வாரமாக நடந்த மோதலில் 55 பேர் பலியானார்கள். கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
விமானம் வீழ்த்தப்பட்டது
இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் 295 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்தான் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.
ஒபாமா- புதின் பேச்சு
ஆனால் உக்ரைன் அரசுதான் மலேசிய விமானத்தை தாக்கியதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா அதிபர் புதினுடன், அமெரிக்கா அதிபர் பாரக் ஒபாமா பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உதவி
இந்த பேச்சின் போது, மலேசிய விமானம் தாக்குதலுக்குள்ளான விவகாரத்தில் உதவி செய்யுமாறு ரஷ்யா அதிபரிடம் அமெரிக்கா அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.