பாக்., ஆப்கன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது: ஜான் கிர்பி
வாஷிங்டன்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதாகவும், தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார் அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளர் ஜான் கிர்பி. அப்போது அவர் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாகவும், ஆனபோதும், தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி அவர்களை அழித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விளங்குவதாக அவர் கூறினார். இதனால், இந்நாடுகள் அமைதியை இழந்து தவிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதேபோல், நீண்ட காலமாக தீவிரவாதிகள் மீது தாக்குதலை நடத்தாமல் இருந்த பாகிஸ்தான் ராணுவம் கடந்த கோடை காலம் முதல்தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளதாகவும் அப்போது கிர்பி தெரிவித்தார்.
மேலும், பொது வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் இத்தகைய தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடரவேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், அதையொட்டி பாகிஸ்தானுடன் தாங்கள் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளதாகவும் கிர்பி கூறினார்.
தற்போது தங்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே சமூக உறவு நிலவுவதாகவும் கிர்பி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.