பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. புதிய தலைவராக ரிஸ்வான் அக்தார் நியமனம்!
பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்துக்கு அடுத்ததாக சக்தி வாய்ந்த அமைப்பாக திகழ்வது இன்டர் சர்வீசஸ் இன்டலிஜன்ஸ் எனப்படும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பாகும். உள்நாட்டு அரசியல், தீவிரவாதம், வெளிநாடு அரசுகளின் செயல்பாடுகள் போன்றவற்றை உளவு பார்த்து பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிப்பது இதன் முக்கிய பணியாகும்.
ஐ.எஸ்.ஐ. அமைப்பு பாகிஸ்தான் பிரதமரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும், அது ராணுவத் தளபதியின் ஆணைக்கு இணங்கவே செயல்படும் என்பது வெளிப்படையான உண்மை.
கடந்த 2012-ம் ஆண்டு முதல் இதன் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் ஷகிருல் இஸ்லாம் இருந்து வருகிறார். இவர் விரைவில் ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ. அமைப்பின் புதிய தலைவராக சிந்து மாகாணத்தின் துணைராணுவ படையின் தலைவராக உள்ள ரிஸ்வான் அக்தார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ரிஸ்வாக் அக்தர், தற்போதைய ராணுவ தளபதி ரகீல் சரீப்புக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.